பிரிஸ்பேன்: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் பும்ரா மற்றும் ஆகாஷ் தீப் இருவரின் அபார ஆட்டத்தால் ஃபாலோ ஆனை இந்திய அணி தவிர்த்து அசத்தியுள்ளது. இதனால் ஓய்வறையில் இருந்த பயிற்சியாளர் கம்பீர் மற்றும் கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி உள்ளிட்டோர் உற்சாகத்தில் துள்ளி குதித்தனர்.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. 3வது நாள் ஆட்டம் முடிவில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 51 ரன்கள் எடுத்திருந்தது. இதன்பின் 4வது நாள் ஆட்டத்தை இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா - கேஎல் ராகுல் இருவரும் தொடங்கினர். இதில் ரோஹித் சர்மா 10 ரன்கள் எடுத்த போது கம்மின்ஸ் வேகத்தில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

இதன்பின் கேஎல் ராகுல் - ஜடேஜா கூட்டணி இணைந்தது. சிறப்பாக ஆடிய கேஎல் ராகுல் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 17வது அரைசதத்தை விளாசினார். மறுமுனையில் ஜடேஜா சிறப்பான கம்பெனி கொடுக்க, இந்திய அணியின் ஸ்கோர் விரைவாக உயர்ந்தது. வலது கை - இடதுகை பேட்ஸ்மேன்கள் களத்தில் இருந்ததால், ஆஸ்திரேலிய பவுலர்களால் திட்டத்தை செயல்படுத்த முடியவில்லை.
அதுமட்டுமல்லாமல் இருவரும் எளிதாக ரன்கள் எடுத்துக் கொண்டே இருந்ததால், ஆஸ்திரேலியா அணி வீரர்கள் விரக்தியை வெளிப்படுத்தினர். சிறப்பாக ஆடிய கேஎல் ராகுல் சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட போது, ஸ்டீவ் ஸ்மித்தின் அபார கேட்சால் 84 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். 6வது விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 67 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
இதன்பின் நிதீஷ் குமார் ரெட்டி - ஜடேஜா கூட்டணி இணைந்தது. நிதீஷ் குமார் ரெட்டி நிதானமாக விளையாட, இம்முறை ரன்கள் சேர்க்கும் வேலையை ஜடேஜா பார்த்து கொண்டார். சிறப்பாக ஆடிய அவர் தனது 22வது அரைசதத்தை விளாச, இந்திய அணி ஃபாலோ ஆனை தவிர்க்கும் என்று நம்பப்பட்டது. ஆனால் நிதீஷ் குமார் ரெட்டி 16 ரன்களில் ஆட்டமிழக்க, தொடர்ந்து வந்த சிராஜ் 1 ரன்னில் வெளியேறினார்.
இதனால் ஜடேஜா அதிரடியாக ரன்களை குவிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அப்போது சில சிக்சர்களை விளாசிய அவர், கம்மின்ஸின் ஷார்ட் பாலில் பவுண்டரி அடிக்க முயன்று 77 ரன்களில் வெளியேறினார். இதனால் இந்திய அணி 213 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்போது இந்திய அணி ஃபாலோ ஆனை தவிர்க்க வேண்டுமென்றால், 33 ரன்கள் சேர்க்க வேண்டிய நிலை உருவாகியது.
அப்போது பும்ரா - ஆகாஷ் தீப் இருவரும் இணைந்து நிதானமாக ரன்களை சேர்க்க தொடங்கினர். ஹேசல்வுட் காயம் காரணமாக வெளியேறியதால், கம்மின்ஸ் - ஸ்டார்க் மட்டுமே இணைந்து போராட வேண்டிய சூழல் ஏற்பட்டது. பவுன்சர், கட்டர்ஸ் என்று வீசிப் பார்த்தும் கடைசி விக்கெட்டை வீழ்த்த முடியவில்லை. இதனால் லயனை அட்டாக்கில் கொண்டு வந்து தூண்டிலை போட்டனர்.
ஆனாலும் சுதாரித்து ஆடிய இருவரும், நிதானமாக ரன்களை சேர்த்தனர். இதனால் இந்திய அணி ஃபாலோ ஆனை தவிர்க்க 12 ரன்கள் மட்டுமே அடிக்க வேண்டிய நிலை வந்தது. தொடர்ந்து கம்மின்ஸ் வீசிய ஒரே ஓவரில் 7 ரன்கள் சேர்க்கப்பட, அந்த சூழலில் ஒவ்வொரு பந்துக்கு ரசிகர்கள் ரியாக்ட் செய்து கொண்டே இருந்தனர். பின்னர் கம்மின்ஸ் பந்தில் ஆகாஷ் தீப் பவுண்டரி அடிக்க, இந்திய அணி ஃபார்லோ ஆனை தவிர்த்தது.
இதனால் ஓய்வறையில் இருந்த கம்பீர், விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா உள்ளிட்டோர் உற்சாகத்தை துள்ளி குவித்தனர். இதன்பின் ஆகாஷ் தீப் அபாரமாக விளையாடி சிக்சரை விளாச, தொடர்ந்து போதுமான வெளிச்சம் இல்லாததால், ஆட்டம் முடிவுக்கு வந்தது. இதனால் இந்திய அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 252 ரன்களுடன் களத்தில் உள்ளது.