போராடி தோல்வி
முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலியா 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்தியா கடைசி பந்து வரை போட்டியை எடுத்துச் சென்றது. எனினும், தோல்வி மட்டுமே கிடைத்தது.
காரணம் என்ன?
இந்த தோல்விக்கு மோசமான பேட்டிங் ஒரு காரணம் என்றாலும் இந்தியா சரியாக 5 பந்துவீச்சாளர்கள் மட்டுமே வைத்துக் கொண்டு ஆடியதும் ஒரு காரணம். அதன் காரணமாகவே இந்தியா கடைசி ஓவரில் 14 ரன்கள் எடுக்க விடாமல் தடுத்தால் வெற்றி பெறலாம் என்ற நிலையில், வேறு பந்துவீச்சாளர்கள் இல்லாத நிலையில், உமேஷ் யாதவ்விடம் பந்தை கொடுத்தார் கோலி.
ஆகாஷ் சோப்ரா பதிவு
ஆகாஷ் சோப்ராவின் ட்விட்டர் பதிவில், "அறிமுக வீரர் மாயங்க், மீண்டும் அணியில் சேர்ந்த உமேஷ், டி20 அனுபவம் மட்டுமே கொண்ட க்ருனால் பண்டியா என இந்திய பந்துவீச்சாளர்கள் 126 ரன் சேஸிங்கை கடைசி பந்து வரை எடுத்துச் சென்றனர். இந்தியா நிச்சயம் ஆறு பந்துவீச்சாளர்களோடு ஆட வேண்டும்." என கூறியுள்ளார்.
சரியான ஆள் விஜய் ஷங்கர்
இந்தியா ஆறு பந்துவீச்சாளர்களோடு ஆடினால், சூழ்நிலைக்கு ஏற்ப பந்துவீச்சாளர்களை மாற்ற முடியும். இதற்கு ஒரே தீர்வு இந்தியா கூடுதல் ஆல்-ரவுண்டர் ஒருவரை அணியில் சேர்த்துக் கொள்வதே ஆகும். விஜய் ஷங்கர் மட்டுமே இதற்கு சரியான ஆள்.
தினேஷை நீக்க முடியாது
ஆனால், விஜய் ஷங்கரை அணியில் சேர்த்தால் யாரை அணியில் நீக்குவது என்ற கேள்வி உள்ளது. இந்திய அணியில் தற்போது அனைத்து வீரர்களுக்கும் உலகக்கோப்பைக்கு முன் தங்களை நிரூபிக்க ஒரு வாய்ப்பு வழங்கப்படும் என கோலி கூறியுள்ள நிலையில், தினேஷ் கார்த்திக்கை நீக்க முடியாது.
கோலி முடிவு
காரணம், தினேஷ் கார்த்திக் ஒருநாள் அணியில் இடம் பெறவில்லை. அவர் டி20 அணியில் மட்டுமே இடம் பெற்றுள்ளார். எனவே, அவருக்கு இருக்கும் கடைசி வாய்ப்பு இரண்டாவது டி20 போட்டி மட்டுமே. அதே சமயம், ரிஷப் பண்ட் ஒருநாள் அணியில் இடம் பெற்றுள்ளார். அவரை இரண்டாம் டி20யில் நீக்கி விட்டு, விஜய் ஷங்கரை சேர்க்கலாம். கோலி என்ன முடிவு எடுப்பார்?