கவுஹாத்தி : ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய பந்துவீச்சாளர்களின் மோசமான செயல்பாட்டால் தான் இந்திய அணி தோற்றது.
ஆனால், துவக்க வீரர் ருதுராஜ் கெயிக்வாட் இந்திய பந்துவீச்சாளர்கள் மீது தவறே இல்லை. மைதானத்தில் காற்றில் ஈரப்பதம் இருந்ததால் பந்து ஈரமாகி இருந்தது. அதனால், பந்துவீச்சாளர்களால் ஒன்றுமே செய்ய முடியவில்லை என போட்டி முடிந்த உடன் செய்தியாளர்கள் சந்திப்பில் சப்பைக் கட்டு கட்டி, பந்துவீச்சாளர்களுக்கு வக்காலத்து வாங்கி இருக்கிறார். ஆனால், நடந்த உண்மையே வேறு.

இந்தப் போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்து 222 ரன்கள் சேர்த்த நிலையில்,அடுத்து ஆஸ்திரேலிய அணி 18 ஓவர்கள் வரை ஓவருக்கு 10 ரன்கள் என்ற ரன் ரேட்டை தக்க வைத்து, பின் கடைசி 2 ஓவர்களில் வெற்றிக்கு 43 ரன்கள் தேவை என்ற நிலையிலும் அந்த ரன்களை அடித்து வெற்றி பெற்றது.
இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் 18 ஓவர் வரை வீசியதை கூட விட்டு விடலாம். ஆனால், 19வது ஓவரில் அக்சர் பட்டேல் பந்துவீச்சில் 22 ரன்கள் அடிக்கப்பட்டது. இந்த ஓவரில் விக்கெட் கீப்பர் இஷான் கிஷன் செய்த சொதப்பலால் கூடுதலாக ரன்கள் போனது. அந்த வகையில் அக்சர் பட்டேல் தப்பினார்.
ஆனால், ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 21 ரன்கள் தேவை என்ற நிலையில் பந்து வீச வந்த பிரசித் கிருஷ்ணா ஒரு யார்க்கர் பந்து கூட வீசவில்லை. அதற்கு முன்பு அவர் வீசிய 18வது ஓவரில் வெறும் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து இருந்தார். அந்த ஓவரில் யார்க்கர், ஸ்லோ பால், ஸ்லோ அவுட்சைடு ஆஃப்சைடு என விதவிதமாக பந்து வீசி ஆஸ்திரேலிய அணியின் ரன் குவிப்பை கட்டுப்படுத்தி இருந்தார்.
ஆனால், அதே பிரசித் கிருஷ்ணா அணியின் வெற்றியை நிர்ணயிக்கும் 20வது ஓவரில் மேலே சொன்ன எந்த விதமான பந்தையும் வீசவில்லை. அதனால் தான் இந்தியா தோல்வி அடைந்தது. ஆனால், போட்டி முடிந்த உடன் பேசிய ருதுராஜ் கெயிக்வாட் 18வது ஓவர் பந்துவீச்சை விட்டுவிட்டு, போட்டி நடந்த போது ஈரப்பதம் இருந்ததால் எளிதாக ஓவருக்கு 12 - 13 ரன்கள் அடிக்கும் நிலை இருந்தது. ஈரமான பந்தை வீசுவதை போன்று இருந்தது. பந்துவீச்சாளர்களால் எதுவுமே செய்ய முடியவில்லை என கூறி இருக்கிறார்.