
இந்திய அணியில் மாற்றம்
இந்தியா - ஆஸ்திரேலியா இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. அடுத்த போட்டி வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான பெர்த் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான இந்திய அணியில் சில மாற்றங்கள் இருக்கும் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அதே போல, 13 வீரர்கள் கொண்ட உத்தேச அணிப் பட்டியலில் அஸ்வின், ரோஹித் பெயர்கள் இடம் பெறவில்லை.

ரோஹித் நீக்கம் ஏன்?
ரோஹித் சர்மா முதல் டெஸ்டில் சரியாக ரன் குவிக்கவில்லை. அதிலும் முதல் இன்னிங்க்ஸில் 37 ரன்கள் அடித்து நல்ல நிலையில் இருந்த போது, டெஸ்ட் போட்டியில் அதிரடியாக சிக்ஸ் அடிக்க ஆசைப்பட்டு ஆட்டமிழந்தார். அது கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. இரண்டாம் இன்னிங்க்ஸில் ஒற்றை இலக்கத்தில் தான் ரன் எடுத்தார். அதனால் தான் ரோஹித்தை கழட்டி விட்டுள்ளார்கள் எனப் பார்த்தால், காரணம் அது இல்லையாம். முதல் டெஸ்டில் பீல்டிங் செய்த போது முதுகில் ஏற்பட்ட வலி இன்னும் சரியாகாததன், காரணமாகவே அவர் பெர்த் டெஸ்டில் நீக்கப்பட்டுள்ளார் என கூறப்படுகிறது.

அஸ்வின் நீக்கம் ஏன்?
முதல் டெஸ்டில் அஸ்வின் உண்மையில் எதிர்பார்த்ததை விட சிறப்பாக பந்து வீசினார். அவர் பந்தில் ஆஸ்திரேலிய வீரர்கள் ரன் குவிக்கவே முயற்சிக்கவில்லை. ஆறு விக்கெட்களும் வீழ்த்தினார். இந்த நிலையில், பெர்த் டெஸ்டில் அஸ்வினும் நீக்கப்பட்டுள்ளார். இந்த நீக்கத்திற்கு கீழ் வயிற்றுப் பகுதியில் ஏற்பட்ட வலி தான் காரணம் என கூறப்படுகிறது.

மீண்டும் முரளி விஜய் - ராகுல்
ரோஹித், அஸ்வின் தவிர்த்து முதல் டெஸ்டில் ஆடிய மற்ற வீரர்கள் உத்தேச அணியில் இடம் பிடித்துள்ளனர். முதல் டெஸ்டில் துவக்க வீரர்கள் முரளி விஜய் - ராகுல் பெரியளவில் சோபிக்கவில்லை, ராகுல் முதலில் சொதப்பினாலும், இரண்டாம் இன்னிங்க்ஸில் 44 ரன்களாவது அடித்தார். முரளி விஜய் இரண்டு வாய்ப்பிலும் சொதப்பினார். இவர்கள் இருவரும் இரண்டாம் டெஸ்டில் மீண்டும் இடம் பெற்றுள்ளனர்.

ப்ரித்வி ஷா காயம்
ப்ரித்வி ஷா காயம் இன்னும் குணமாகவில்லை என்பதே முரளி விஜய் - ராகுல் மீண்டும் அணியில் இடம் பிடிக்கக் காரணம். மூன்றாம் டெஸ்டில் ப்ரித்வி வந்துவிடுவார் என்பதால், விஜய் - ராகுல் இருவரும் இரண்டாம் டெஸ்டில் ரன் குவித்து தங்களை நிரூபிக்க முயற்சி செய்வார்கள் என எதிர்பார்க்கலாம்.

மாறாத மிடில் ஆர்டர்
மிடில் - ஆர்டரில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. பேட்டிங்கில் மூன்றாம் இடத்தில் புஜாரா, அடுத்து கோலி, ரஹானே தொடர்கின்றனர். இவர்களை நம்பியே இந்திய அணியின் பேட்டிங் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஹனுமா விஹாரிக்கு வாய்ப்பு
ரோஹித் சர்மா முதல் டெஸ்டில் ஹனுமா விஹாரியின் இடத்தை பறித்துக் கொண்டார். ரோஹித் காயத்தில் இருப்பதால், ஹனுமாவுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால், களம் இறங்கும் இறுதி அணியில் ஹனுமா இடம் பெறுவாரா என்பது இந்தியா எத்தனை வேகப் பந்துவீச்சாளர்கள் கொண்டு களம் இறங்கும் என்பதை பொறுத்தே அமையும்.

அணியில் ஜடேஜா
அஸ்வின் இல்லையென்றால், ஒரே தீர்வு ஜடேஜா தான். பேட்டிங்கில் ஜடேஜா கை கொடுப்பார் என்பதால், ஜடேஜா இந்த போட்டியில் நிச்சயம் இடம் பிடித்து விடுவார். அணியில் நான்கு வேகப் பந்துவீச்சாளர்கள் இடம் பெற்றால் ஜடேஜா சுழற் பந்துவீச்சாளராகவும், தேர்ந்த பேட்ஸ்மேனாகவும் செயல்படுவார். ஹனுமாவுக்கு இடம் கிடைக்காது.

ஐந்து வேகங்கள்
உத்தேச அணியில் இஷாந்த் சர்மா, ஷமி, பும்ரா, புவனேஸ்வர் குமார், உமேஷ் ஆகிய ஐந்து வேகப் பந்துவீச்சாளர்கள் இடம் பிடித்துள்ளனர். பெர்த் ஆடுகளம் வேகப் பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும் என்பதால், இவர்களில் நான்கு பேர் அணியில் இடம் பெற அதிக வாய்ப்புள்ளது.
இந்திய உத்தேச அணி
13 வீரர்கள் கொண்ட உத்தேச அணி - விராட் கோலி (கேப்டன்), முரளி விஜய், ராகுல், புஜாரா, ரஹானே (துணை கேப்டன்), ஹனுமா விஹாரி, ரிஷப் பண்ட், ஜடேஜா, இஷாந்த் சர்மா, ஷமி, பும்ரா, புவனேஸ்வர் குமார், உமேஷ் யாதவ்.


Click it and Unblock the Notifications