உலகக்கோப்பை ஆயத்தம்
2019 உலகக்கோப்பை தொடர் இங்கிலாந்தில் நடைபெற உள்ளது. அதற்கான ஆயத்தங்களில் மற்ற நாடுகளை விட இந்தியா முன்னிலையில் இருக்கிறது. கடந்த ஒரு வருடமாகவே உலகக்கோப்பைக்கான வீரர்களை தேர்வு செய்து வந்த இந்திய அணி, தற்போது அதில் கடைசி கட்டத்துக்கு வந்துள்ளது.
உத்தேச அணி
ஆஸி. தொடருக்கான அணித் தேர்வில் எந்த பரிசோதனை முயற்சியும் இருக்காது. உலகக்கோப்பைக்கான கடைசி உத்தேச அணியாகவே இந்த தொடர் அமையும் என பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். இதனால், இந்த தொடரில் எந்த வீரர்கள் இடம் பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
16 வீரர்கள் யார்?
பிசிசிஐ-யில் இருந்து வரும் தகவல்களின் படி தற்போது 16 வீரர்கள் அடையாளம் காணப்பட்டு இருக்கிறார்கள். இவர்களில் 15 வீரர்கள் உலகக்கோப்பைக்கு அனுப்பப்பட உள்ளனர். அந்த 16 வீரர்கள் யார் என்பது ஆஸ்திரேலிய தொடருக்கான அணி அறிவிக்கப்படும் போது தெரிந்து விடும். கடைசியாக சில வீரர்கள் இடையே மட்டுமே போட்டி இருப்பதாக கூறப்படுகிறது.
இரண்டு இடங்களுக்கு போட்டி
இந்திய அணியில் இரண்டு இடங்களுக்கு தான் இன்னும் வீரர்கள் தேர்வு செய்யப்படவில்லை. ஒன்று இரண்டாவது விக்கெட் கீப்பர். மற்றொன்று மாற்று துவக்க வீரர். இந்த இரண்டு இடங்களுக்கு தினேஷ் கார்த்திக், ரிஷப் பண்ட், ராகுல் ஆகிய மூவரில் இருவர் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிய வந்துள்ளது.
ராகுல் நிலை
ராகுல் தற்போது பார்ம் அவுட் ஆகவே இருந்து வரும் நிலையில், அவருக்கு கடைசி வாய்ப்பு அளிக்கப்பட்டு பார்க்கப்படும் என கூறப்படுகிறது. அதே போல் ரிஷப் பண்ட் மாற்று துவக்க வீரராக இடம் பிடிக்க வாய்ப்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
தினேஷ் கார்த்திக் இடம் பெறுவாரா?
ரிஷப் பண்ட், ராகுல் இருவரையும் தேர்வு செய்ய முடிவு செய்தால், தினேஷ் கார்த்திக் தன் இடத்தை இழக்க நேரிடும் என கூறப்படுகிறது. இவர்கள் மூவரின் இடம் ஆஸி. தொடரில் தான் நிர்ணயிக்கப்பட உள்ளது.
முழு பலம்
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடரில் மட்டுமே இந்திய அணியில் சில வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்படும். ஒருநாள் தொடரில் முழு பலத்துடன் கூடிய இந்திய அணியே களமிறங்கும் என கூறப்படுகிறது.
ரோஹித் சர்மாவுக்கு டி20யில் ஓய்வு
ரோஹித் சர்மாவுக்கு டி20 தொடரில் ஓய்வு வழங்கப்படும் என கூறப்படுகிறது. ஒருநாள் அணிக்கு ரோஹித் திரும்பி விடுவார். ஒருநாள் அணியில் வேகப் பந்துவீச்சாளர்கள் நால்வர் சேர்க்கப்பட்டு அவர்கள் சுழற்சி முறையில் பயன்படுத்தப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.