பிரிஸ்பேன்: இந்திய அணியின் இளம் வீரர்களுக்கு யார் பவுலிங் செய்கிறார்கள் என்பது பற்றி கவலையில்லை என்று சுப்மன் கில் தெரிவித்துள்ளார். இந்திய அணி பேட்ஸ்மேன்கள் பந்தை மட்டும் பார்த்து விளாசுவதாக கூறிய அவர், பந்திற்கு பின் உள்ள முகத்தையோ பெயரையோ பார்ப்பதில்லை என்று கூறியுள்ளார்.
2021 பார்டர் கவாஸ்கர் டிராபியில் ஆஸ்திரேலியா அணியை காபா மைதானத்தில் வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றதற்கு ரிஷப் பண்ட் முக்கியமான காரணமாக அமைந்தார். அதேபோல் ரிஷப் பண்ட்-க்கு நிகரான ஆட்டத்தை இளம் வீரராக இருந்த சுப்மன் கில் வெளிப்படுத்தி இருந்தார். இந்த நிலையில் மீண்டும் காபா மைதானத்தில் நடக்கவுள்ள ஆட்டத்தில் சுப்மன் கில் விளையாடவுள்ளார்.

அடிலெய்டு டெஸ்ட் போட்டியின் இரு இன்னிங்ஸ்களிலும் சுப்மன் கில்லுக்கு நல்ல தொடக்கம் கிடைத்த போதும், அதனை பெரிய ஸ்கோராக மாற்ற முடியவில்லை. இதனால் சுப்மன் கில் ஏமாற்றத்துடன் பெவிலியன் திரும்பினார். இந்த நிலையில் காபா மைதானத்தில் தனது முழு திறமையையும் வெளிப்படுத்த சுப்மன் கில் தயாராக இருக்கிறார்.
இதுகுறித்து சுப்மன் கில் பேசுகையில், அடிலெய்டு டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்தாலும், அது பிங்க் பால் டெஸ்ட் தான். ரெட் பாலில் மட்டுமே விளையாடி வந்திருப்பதால், பிங்க் பாலை கவனித்து விளையாடுவது கடினமாக இருந்தது. அதேபோல் இரவு நேரத்தில் சீமையும், கைகளையும் கவனிப்பதே எளிதாக இல்லை. ஆஸ்திரேலியா மைதானங்களில் விளையாடும் போது மனதளவில் ஃபிட்னஸ் உடன் இருக்க வேண்டும்.
ஏனென்றால் ஆஸ்திரேலியாவின் சூழலில், சவாலும் வேறு மாதிரி இருக்கும். காபா மைதானத்தை பொறுத்தவரை முதல் 45 ஓவர்கள் விளையாடிவிட்டால், அடுத்த 40 ஓவர்களில் பேட்ஸ்பேன்கள் புகுந்து விளையாடலாம். காபா மைதானத்தை பொறுத்தவரை இந்திய அணிக்கு எந்த பயமும் கிடையாது. இந்த மைதானத்தில் வெற்றி பெறாதவர்கள் வேண்டுமானால் பயம் கொள்ளலாம்.
நாங்கள் கடந்த முறையே வென்றுவிட்டோம். அதேபோல் இந்த தலைமுறை இந்திய பேட்ஸ்மேன்கள் யார் பவுலிங் செய்கிறார்கள் என்பதை கண்டுகொள்வதில்லை. அவர்கள் மிக சாதாரணமாக பந்தை மட்டுமே பார்த்து விளாசுகிறார்கள். இன்றைய பயிற்சியில் ரோஹித் சர்மா கலந்து கொள்ளவில்லை. அதற்கு அவர் ஏற்கனவே கடந்த 3 நாட்களாக தீவிர பயிற்சியில் ஈடுபட்டுவிட்டதாக தெரிவித்துள்ளார்.
கடந்த முறை காபா மைதானத்தில் மிட்சல் ஸ்டார்க்கை இந்திய அணியின் சுப்மன் கில் பொளந்து கட்டினார். இதனால் நம்பர் 3ல் சுப்மன் கில் களமிறங்குவது இந்திய அணிக்கு கூடுதல் சாதகமாக இருக்கும் என்று பார்க்கப்படுகிறது. ஏனென்றால் சுப்மன் கில்லால் எந்த பவுலரையும் எளிதாக அட்டாக் செய்ய முடியும். இதனால் அவர் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று நம்பப்படுகிறது.