அடிலெய்டு: பார்டர் - கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டுமா? பதவி விலக வேண்டுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அவரது சமீபத்திய ஃபார்ம் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் அவர் எடுக்கும் கேப்டன்சி முடிவுகள் விமர்சிக்கப்பட்டு வருகின்றன.
2014 ஆம் ஆண்டு தோனி இதே ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் பாதியில் கேப்டன் பதவியில் இருந்து விலகியதோடு, டெஸ்ட் போட்டிகளில் இருந்தும் ஓய்வை அறிவித்தார். அதே விஷயத்தை ரோஹித் சர்மாவும் செய்ய வேண்டும் என சில ரசிகர்கள் பேசி வருகின்றனர்.

ரோஹித் சர்மாவை கேப்டன் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்பதற்கான வாதங்கள் என்ன என்று பார்க்கலாம். அவரது மோசமான பேட்டிங் ஃபார்ம் இதில் முன்னிலை வகிக்கிறது. ரோஹித்தின் சமீபத்திய டெஸ்ட் போட்டி ஃபார்ம் ஏமாற்றமளிக்கக் கூடியதாக உள்ளது. மேலும், அவரது தனிப்பட்ட மோசமான பேட்டிங் செயல்பாடு அவரது மனநிலையை பாதிக்கலாம். அதனால், அவரால் கேப்டனாக சில அதிரடி முடிவுகளை எடுக்க முடியாமல் போகலாம் என்ற கருத்து முன்னாள் வீரர்களால் சொல்லப்படுகிறது.
இரண்டாவது டெஸ்டில் ரோஹித் சர்மாவின் வியூகங்கள், பவுலிங் மாற்றம், ஃபீல்டிங் நிறுத்தம் என பலவும் கேள்விக்கு உள்ளாக்கப்பட்டன. ரோஹித் சர்மா ஃபார்மில் இல்லாத நிலையில், அவரை பிளேயிங் லெவனில் வைத்திருப்பது மற்ற பேட்ஸ்மேன்களுக்கு கூடுதல் சுமையை அளிக்கிறது என்ற வாதமும் கூறப்படுகிறது.
அதே சமயம், ரோஹித் சர்மா அணியிலேயே விராட் கோலிக்கு அடுத்து அதிக அனுபவமிக்க வீரராகவும், தலைமை பண்பு கொண்ட வீரராகவும் இருக்கிறார். கேப்டன் என யாரை வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால், அணியில் இருக்கும் மற்ற வீரர்கள் அவரை தலைவராக ஏற்றுக் கொள்ள வேண்டும். ரோஹித் சர்மாவை அனைத்து வீரர்களும் கேப்டனாக ஏற்றுக் கொள்கிறார்கள் எனும் நிலையில் அவருக்கு இணையான ஒரு கேப்டனை அடையாளம் காணும் முன் அவரை எளிதில் நீக்க முடியாது.
ஒரு தொடரின் நடுவே கேப்டனை மாற்றுவது என்பது குழப்பத்தை ஏற்படுத்தும். அதிலும் ரோஹித் சர்மா கேப்டன் பதவியில் இருந்து விலகுவது என்பது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய நிகழ்வாக இருக்கும். எனவே, தொடரின் நடுவில் கேப்டனை நீக்குவது அணியின் உத்வேகத்தை சீர்குலைத்து, நிலையற்ற தன்மையை ஏற்படுத்தும்.
ரோஹித்தின் ஃபார்ம் மோசமாக இருந்தாலும், அவர் தனது அனுபவத்தின் மூலம் ஃபார்மை மீட்டெடுத்து, சிறந்த வியூகங்களை, முடிவுகளை எடுக்கக்கூடிய திறன் கொண்டவர் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இதன் மூலம் அவர் இந்த டெஸ்ட் தொடரில் மீதமுள்ள மூன்று போட்டிகளில் இந்திய அணியை வெற்றிகரமாக வழிநடத்தவும் வாய்ப்பு உள்ளது.