
ராகுல் சொற்ப ரன்கள்
முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ராகுல் அடித்த ரன்கள் 2, 44, 2, 0. இவருடன் துவக்க வீரராக களமிறங்கிய முரளி விஜய்யும் சொற்ப ரன்களே எடுத்தார். கடந்த ஒரு வருடமாக பேட்டிங்கில் சொதப்பி வரும் ராகுலுக்கு அணியில் இடமளிக்கக் கூடாது என ரசிகர்கள் முதல் விமர்சகர்கள் வரை குரல் கொடுத்தனர்.

மாயன்க் - ஹனுமா இணை
அதற்கேற்ப மூன்றாவது டெஸ்டில் புதிய வீரர் மாயன்க் அகர்வால், மிடில் ஆர்டரில் இறங்கும் ஹனுமா விஹாரி துவக்க வீரர்களாக களமிறங்கினர். மாயன்க் அருமையாக ஆடி அரைசதம் அடித்தார். ஹனுமா சரியாக ரன் குவிக்கவில்லை.

ரோஹித் சர்மா இடம் பெறவில்லை
மேலும், மூன்றாம் போட்டியில் ஆடிய ரோஹித் சர்மா நான்காவது டெஸ்ட் போட்டியில் ஆடவில்லை. அவர் தனக்கு குழந்தை பிறந்துள்ளதை அடுத்து இந்தியா விரைந்துள்ளார். அவர் ஆடிய ஆறாம் இடத்தில் மீண்டும் ஹனுமா விஹாரி களமிறங்க உள்ளார்.

மீண்டும் வந்த ராகுல்
இந்நிலையில், ராகுலை மீண்டும் துவக்க வீரராக தேர்வு செய்துள்ளது அணி நிர்வாகம். முரளி விஜய் கூட ஓரளவு ஆடினார். சில ஓவர்கள் வரையாவது தாக்குப் பிடித்தார். அவருக்கு அதிக அனுபவமும் உள்ளது. அவரை எடுக்காமல் ஏன் அணியில் ராகுலை எடுத்தார்கள் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

முரளி விஜய் அதிக வயது
முரளி விஜய்க்கு தற்போது 34 வயது ஆகிறது. இனி அவர் அதிக சர்வதேச போட்டிகள் ஆடும் வாய்ப்பு இல்லை என்பதால் அவரை விட ராகுல் இளம் வீரர் எனக் கருதி மீண்டும் ராகுலுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பார்த்திவ் பட்டேல் எங்கே?
மாற்று விக்கெட் கீப்பராக இந்திய டெஸ்ட் அணியில் இடம் பெற்றுள்ள பார்த்திவ் பட்டேலுக்கு நான்காவது டெஸ்டில் வாய்ப்பு கொடுக்கலாமே என்ற குரல்களும் எழுகின்றன. எனினும், இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம் தன் செல்லப் பிள்ளை ராகுலுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுத்துள்ளது.

ரசிகர்கள் கடும் எதிர்ப்பு
ஏற்கனவே, ராகுலுக்கு ஒருநாள் மற்றும் டி20 அணியில் இடம் கொடுத்ததற்கு ரசிகர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது. இந்நிலையில் டெஸ்ட் போட்டியில் மீண்டும் ஒரு வாய்ப்பு பெற்றுள்ளார் ராகுல். இதற்கும் ரசிகர்கள் கடும் எதிர்வினை ஆற்றி வருகின்றனர். சிலர் ராகுலை எடுப்பதற்கு பதில் 10 வீரர்களோடு இந்தியா ஆடலாம் என கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications










