மெல்போர்ன்: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டிக்கான பயிற்சியின் போது இந்திய அணியின் நட்சத்திர தொடக்க வீரரான கேஎல் ராகுலின் விரலில் காயம் ஏற்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. இதனால் அடுத்த டெஸ்ட் போட்டியில் அவர் விளையாடுவாரா என்ற சந்தேகம் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4வது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் மைதானத்தில் வரும் 26ஆம் தேதி நடக்கவுள்ளது. பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி என்பதால், வழக்கத்தை விடவும் கூடுதல் எதிர்பார்ப்பு உள்ளது. இதுவரை நடந்த 3 டெஸ்ட் போட்டிகளில், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் இருக்கின்றன.

காபாவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டி மழை காரணமாக டிராவில் முடிவடைந்தது. இதனால் எஞ்சியுள்ள 2 டெஸ்ட் போட்டிகளிலும் வெல்லும் அணியே, டெஸ்ட் தொடரை கைப்பற்ற முடியும். அதேபோல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இந்திய அணி முன்னேற வேண்டுமென்றால், அடுத்த 2 போட்டிகளிலும் கட்டாயம் வெல்ல வேண்டும் என்ற சூழல் ஏற்பட்டுள்ளது.
இதற்காக இந்திய அணி வீரர்கள் தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். சீனியர் வீரர்கள், இளம் வீரர்கள் என்று அனைவரும் வலைப்பயிற்சியில் ஈடுபட்டனர். இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா சுமார் ஒன்றரை மணி நேரமாக டிஃபென்ஸ் பயிற்சியில் மட்டுமே ஈடுபட்டிருக்கிறார். அதேபோல் சுப்மன் கில் சுமார் 2 மணி நேரத்திற்கும் அதிகமாக பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.
இதனிடையே நட்சத்திர தொடக்க வீரராக உருவாகியுள்ள கேஎல் ராகுல், பேட்டிங் பயிற்சியின் போது விரல்களை பிடித்து கொண்டு நின்றுள்ளார். அவருக்கு பயிற்சியாளர் ஒருவர் உதவி செய்யும் வீடியோ வெளியாகியுள்ளது. இதனால் கேஎல் ராகுல் விரலில் காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த காயம் பலமானதா, இல்லையா என்பது குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியிடப்படவில்லை.
ஏற்கனவே சுப்மன் கில் கை விரலில் ஏற்பட்ட காயம் காரணமாகவே பெர்த் டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை. இதனால் கேஎல் ராகுலுக்கும் காயம் ஏற்பட்டுவிட்டதா என்ற ரசிகர்களிடையே குழப்பமடைந்துள்ளனர். நியூசிலாந்து டெஸ்ட் தொடரின் போது பின்னடைவை சந்தித்த கேஎல் ராகுல், ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் மிகப்பெரிய எழுச்சியை கண்டுகொள்ளார்.
இதுவரை விளையாடிய 6 இன்னிங்ஸ்களில் 2 அரைசதங்கள் உட்பட 235 ரன்களை விளாசி இருக்கிறார். காபாவில் நடந்த டெஸ்ட் போட்டியில் கேஎல் ராகுல் தனியாளாக போராடி 84 ரன்களை சேர்த்தது இந்திய அணிக்கு மிகப்பெரிய சாதகமாக அமைந்தது. இதனால் கேஎல் ராகுல் அடுத்த டெஸ்டில் விளையாடுவது மிக முக்கியமானது என்று பார்க்கப்படுகிறது.