மும்பை : 2023 உலகக்கோப்பை இறுதிப் போட்டி முடிந்து நான்கு நாட்கள் ஆன நிலையில், இந்திய வீரர் கே எல் ராகுல் ட்விட்டரில் உலகக்கோப்பை தோல்வி குறித்து பதிவிட்டு இருக்கிறார்.
உலகக்கோப்பை தோல்விக்கு பின் பெரும் சோகத்தில் இந்திய வீரர்கள் காணப்பட்டனர். போட்டி முடிந்த உடன் கே எல் ராகுல் ஆடுகளத்தில் கீழே முட்டி போட்டு சாய்ந்து விட்டார். அப்போதே ராகுல் துயரத்தில் இருந்தார்.
போட்டி முடிந்த பின் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இந்திய வீரர்களை ஓய்வறையில் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போதும் ராகுல் முகம் சோர்ந்து காணப்பட்டது. இந்த நிலையில், நான்கு நாட்கள் ஆன நிலையில் ட்விட்டரில் தோல்வி குறித்து பதிவிட்டு இருக்கிறார் ராகுல்.

இந்த அளவுக்கு அவர் துயரத்தில் இருக்கக் காரணம், இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன 2023 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணியே வெற்றி பெறும் என அனைவரும் நம்பினர். இந்திய அணி உலகக்கோப்பையில் தோல்வியே சந்திக்காமல் தொடர்ந்து 10 போட்டிகளில் வெற்றி பெற்று இருந்ததால் இந்திய அணி மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.
ஆனால், எதிர்பாராவிதமாக ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. ராகுல் இறுதிப் போட்டியில் 107 பந்துகளில் 66 ரன்கள் அடித்து இருந்தார். அவர் நிதான ஆட்டத்தால் தான் இந்திய அணி தோல்வி அடைந்தது என சிலர் விமர்சனம் செய்தனர். இந்த நிலையில், இந்தியா தோல்வி குறித்து ட்விட்டரில், "இன்னும் வலிக்கிறது" எனக் கூறி கே எல் ராகுல் பதிவிட்டு இருக்கிறார்.
ராகுலின் பதிவிற்கு கீழே இந்திய ரசிகர்கள் பலர், "நீங்கள் சிறப்பாக செயல்பட்டீர்கள். தோல்வியை மறந்து மீண்டு வாருங்கள்" எனக் கூறி அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.
கே எல் ராகுல் உலகக்கோப்பை தொடரில் சிறப்பான பங்களிப்பை செய்து இருந்தார். ஐந்தாம் வரிசை பேட்ஸ்மேன் ஆக விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோருடன் கூட்டணி அமைத்து சில சிறப்பான இன்னிங்க்ஸை அவர் ஆடி இருந்தார்.