மெல்போர்ன்: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாடி வரும் ஐந்து போட்டிகள் டெஸ்ட் தொடரில் இதுவரை நடந்த மூன்று போட்டிகளில் சிறப்பாக விளையாடி உள்ள ஒரே இந்திய வீரர் கே எல் ராகுல் மட்டுமே.
அவர் இதுவரை ஆடிய ஆறு இன்னிங்ஸ்களில் மூன்று முறை சிறப்பான பேட்டிங்கை பதிவு செய்து இருக்கிறார். இந்த நிலையில் அவர் அடுத்து நடைபெற உள்ள பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் ஹாட்ரிக் சதம் அடிப்பாரா? என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

இந்த நிலையில் இந்திய அணி அடுத்து மெல்போர்னில் நான்காவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக விளையாட உள்ளது. டிசம்பர் 26 அன்று துவங்க உள்ள இந்த டெஸ்ட் பாக்ஸிங் டே போட்டி என அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 26 அன்று துவங்கும் டெஸ்ட் போட்டி பாக்ஸிங் டே போட்டி என அழைக்கப்படுகிறது.
எனவே, இந்த போட்டிக்கான எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தால் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை வெல்ல முடியாமல் போகும். இந்த நிலையில், தான் கே எல் ராகுல் குறித்த எதிர்பார்ப்பு அதிகம் ஆகி உள்ளது.
இதற்கு முன் 2021 மற்றும் 2023 ஆகிய இரண்டு ஆண்டுகளில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி விளையாடியது. அந்த இரண்டு போட்டிகளிலும் கே எல் ராகுல் சதம் அடித்து இருந்தார். 2021 ஆம் ஆண்டு நடந்த பாக்ஸிங் டே போட்டியில் 123 ரன்களும், 2023 ஆம் ஆண்டு நடந்த போட்டியில் 101 ரன்களும் எடுத்து இருந்தார்.
இந்த நிலையில் 2024 பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியிலும் அவர் சதம் அடிப்பாரா? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது, இந்த முறை அவர் சதம் அடித்தால் பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டிகளில் ஹாட்ரிக் சதம் அடித்த வீரராக இருப்பார் கே எல் ராகுல்.
மெல்போர்ன் மைதானத்தில் கே எல் ராகுல் கடைசியாக ஆடிய டெஸ்ட் போட்டியில் ஒற்றை இலக்கத்தில் மட்டுமே ரன் சேர்த்து ஆட்டம் இழந்து இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால், அது 2014 ஆம் ஆண்டு நடந்தது. 2014 ஆம் ஆண்டு நடந்த மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் கே எல் ராகுல் 2 இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 4 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
எனினும், அந்தப் போட்டி நடைபெற்று சுமார் பத்து ஆண்டு காலம் ஆகிவிட்டது. தற்போது கே எல் ராகுல் நல்ல ஃபார்மில் இருப்பதால் அவர் இந்த முறை சதம் அடிப்பார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.