கவுஹாத்தி : இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் ஓவர் விதிகளை மதிக்காமல் சொதப்பியதால், கடைசி ஓவரில் இந்திய அணிக்கு ஐசிசி விதிப்படி தண்டனை கொடுத்தார் அம்பயர்.
கடைசி ஓவரில் உள் வட்டத்துக்குள் ஐந்து பீல்டர்கள் நிற்க வேண்டும் என அந்த விதிப்படி தண்டனை வழங்கப்பட்டது. அதன் காரணமாக கடைசி ஓவரில் ஆஸ்திரேலியா 21 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலையிலும் இந்திய அணியால் பவுண்டரி அருகே நான்கு பீல்டர்களை மட்டுமே நிறுத்த முடிந்தது.
இதை பயன்படுத்தியே கிளென் மேக்ஸ்வெல் எளிதாக கடைசி நான்கு பந்துகளில் மூன்று ஃபோர், ஒரு சிக்ஸ் அடித்து இந்திய அணியை வீழ்த்தினார். அது என்ன ஓவர் விதி? சூர்யகுமார் யாதவ் எங்கே தவறு செய்தார்?

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதிய மூன்றாவது டி20 போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்து 222 ரன்கள் குவித்தது. அடுத்து சேஸிங் செய்த ஆஸ்திரேலிய அணி விக்கெட்களை இழந்த போது மேக்ஸ்வெல் ஒருபுறம் நின்று ஆடினார். 14வது ஓவருக்கு பின் மேத்யூ வேட் அவருடன் சேர்ந்து அதிரடி ஆட்டத்தை தொடர்ந்தார்.
அதனால், சூர்யகுமார் யாதவ் ஓவரை மாற்றவும், ஓவர்களுக்கு இடையே பீல்டிங் மாற்றவும், ஆலோசனைகள் வழங்கவும் கூடுதல் நேரம் எடுத்துக் கொண்டார். டி20 போட்டிகளுக்கான ஐசிசியின் புதிய விதிமுறைப்படி குறிப்பிட்ட நேரத்திற்குள் ஒரு அணி 19 ஓவர்களை வீசி முடிக்காமல் போனால், கடைசி ஓவர் பந்து வீசும் போது உலகக்கோப்பை வட்டத்துக்குள் ஐந்து பீல்டர்களை நிறுத்த வேண்டும். அப்படி செய்தால் பவுண்டரி எல்லையை ஒட்டி நான்கு பீல்டர்கள் மட்டுமே நிற்க முடியும்.
இப்படி செய்வதன் மூலம் எதிரணி பேட்ஸ்மேன் கேட்ச் பயமின்றி அதிக பவுண்டரி அடிக்க முயற்சி செய்வார். நான்கு பீல்டர்கள் மட்டுமே பவுண்டரி அருகே நிற்பதால் சுற்றிலும் நிறைய இடைவெளி இருக்கும். அந்த பகுதிகளில் பந்தை அடித்தால் கேட்ச் பிடிக்கும் வாய்ப்பு குறைவாக இருக்கும் என்பதால் பந்து வீசும் அணிக்கு இந்த தண்டனையை அளித்தால் எதிரணி அதிக பவுண்டரி அடிக்கும் வாய்ப்பு ஏற்படும்.
மூன்றாவது டி20 போட்டியிலும் இதே விஷயம் தான் நடந்தது. கேப்டன் சூர்யகுமார் யாதவ் ஓவரை நிர்வகிப்பதில் நேரம் தவறியதால் 20 ஓவருக்கு முன் அம்பயர் இந்திய அணிக்கு தண்டனை வழங்கி உள் வட்டத்துக்குள் ஐந்து பீல்டர்களை நிற்குமாறு கூறினார். கடைசி ஓவரில் மேக்ஸ்வெல் 21 ரன்கள் அடித்து வெற்றி பெற இது முக்கிய காரணமாக இருந்தது.
ஒரு வேளை இந்திய அணி இந்த தண்டனையை பெறாமல் பவுண்டரி எல்லை அருகே ஐந்து பீல்டர்களை நிறுத்தி இருந்தால் மேக்ஸ்வெல் அடித்த ஒரு பவுண்டரியையாவது தடுத்து இருக்கலாம் அல்லது கேட்ச் பிடித்து இருக்கலாம். ஆக, கேப்டன்சியில் செய்த ஒரு தவறு இந்திய அணியின் தோல்விக்கு மறைமுக காரணமாக அமைந்து விட்டது.