பிரிஸ்பேன்: இந்திய அணி பேட்ஸ்மேன்கள் தங்களின் இமேஜை ஓய்வறையில் விட்டுவிட்டு பேட்டிங் செய்ய களமிறங்க வேண்டும் என்று கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் அறிவுறுத்தியுள்ளார். சுப்மன் கில் இதுபோன்ற ஷாட்களை நன்றாக செட்டிலான பின் விளையாட வேண்டும் என்று கூறிய அவர், ஆஸ்திரேலியாவில் பிட்ச்-க்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 3வது போட்டியில் இந்திய அணி திண்டாடி வருகிறது. முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா அணி 445 ரன்களை குவித்துள்ள நிலையில், இந்திய அணி 3வது நாள் ஆட்டம் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 51 ரன்களை சேர்த்துள்ளது. கேஎல் ராகுல் ரன்களும், ரோஹித் சர்மா ரன் ஏதும் எடுக்காமலும் களத்தில் உள்ளனர்.

இந்தப் போட்டியில் இந்திய அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் விக்கெட்டை இழந்து சென்றது ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் சுப்மன் கில் ட்ரைவ் விளையாட முயன்று விக்கெட்டை பறிகொடுத்து சென்றுள்ளார். கடந்த முறை காபா மைதானத்தில் 91 ரன்களை விளாசிய சுப்மன் கில், இம்முறை கொஞ்சம் கூட நிதானமின்றி விக்கெட்டை பறிகொடுத்துள்ளார்.
இதுகுறித்து இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் பேசுகையில், இந்திய அணியின் இளம் வீரரான சுப்மன் கில் தனது இமேஜை ஓய்வறையிலேயே விட்டுவிட வேண்டும். ஏனென்றால் முதல் இன்னிங்ஸில் சுப்மன் கில் ஆடிய ஷாட்கள் களமிறங்கிய உடன் விளையாட கூடாது. அதுபோன்ற ஷாட்களை விளையாட நன்றாக செட்டிலாகி இருக்க வேண்டும்.
அதேபோல் பிட்ச் எப்படி செயல்படுகிறது என்ற கணக்கு கூட பேட்ஸ்மேனிடம் இருக்காது. அதற்கு முன்பாக அதுபோன்ற ஃபேன்சி ஷாட்களை விளையாடுவது தேவையில்லாதது. அதுபோன்ற ஷாட்களை பாக்கெட்டில் வைத்து கொள்ள வேண்டும். எப்போது 30 ரன்களையோ, 40 ரன்களையோ அல்லது அரைசதத்தையோ கடக்கிறார்களோ.. அப்போது அதுபோன்ற ஷாட்களை தைரியமாக விளையாடலாம்.
இந்த இன்னிங்ஸில் 3வது ஓவரிலேயே அதுபோன்ற ஷாட்டை விளையாட முயற்சித்திருக்க கூடாது. மிட்சல் மார்ஷ் மிகச்சிறப்பாக அந்த கேட்சை பிடித்தார் என்றும் சொல்ல வேண்டும். இதனால் சுப்மன் கில் பக்கம் அதிர்ஷ்டம் இல்லை என்றும் கருதலாம். ஆனால் அந்த பந்தை சுப்மன் கில் விளையாடாமல் தவிர்த்திருக்க முடியும்.
யாருக்கும் சிக்கலின்றி விக்கெட் கீப்பரிடம் விட்டிருந்தால், இந்திய அணிக்கும் பின்னடைவு ஏற்பட்டிருக்காது. இப்போது வேறு வழியின்றி ஓய்வறையில் உட்கார்ந்திருக்க தேவையில்லை என்று தெரிவித்துள்ளார். 2வது டெஸ்டில் நன்றாக செட்டிலாகி இருந்த சுப்மன் கில், மிக சாதாரண பந்தில் ஆட்டமிழந்து வெளியேறி இருந்தார். இதனால் சுப்மன் கில் பேட்டிங் ஃபார்ம் குறித்த கேள்விகள் எழுந்துள்ளன.