பிரிஸ்பேன்: இந்திய அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணியின் நட்சத்திர வீரரான ட்ராவிஸ் ஹெட் சதம் விளாசி சாதனை படைத்துள்ளார். இதன் மூலமாக கடந்த முறை புஜாரா எப்படி ஆஸ்திரேலியா அணியை சோதித்தாரோ, அதேபோல் இம்முறை ட்ராவிஸ் ஹெட் இந்திய அணியை சோதிப்பதாக ரசிகர்கள் சோகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், உலகக்கோப்பை, டி20 உலகக்கோப்பை என்று 3 ஐசிசி தொடர்களிலும் இந்திய அணியை வெளுத்து கட்டியவர் ஆஸ்திரேலியா அணியின் ட்ராவிஸ் ஹெட். இதனால் பார்டர் கவாஸ்கர் டிராபி தொடக்கத்திலேயே ட்ராவிஸ் ஹெட் முக்கியமான வீரராக இருப்பார் என்று ரசிகர்கள் உட்பட பலரும் கணிப்பை வெளியிட்டனர்.

அதற்கேற்ப அடிலெய்டு டெஸ்ட் போட்டியிலேயே 140 ரன்களை விளாசி ஆஸ்திரேலியா அணிக்கு வெற்றியை தேடி கொடுத்தார். இந்த நிலையில் பிரிஸ்பேனில் நடைபெற்று வரும் 3வது டெஸ்ட் போட்டியிலும் ட்ராவிஸ் ஹெட் 115 பந்துகளில் சதம் விளாசி சாதனை படைத்துள்ளார். 2 இன்னிங்ஸ்களில் 2 சதங்களை விளாசியதன் மூலமாக பல்வேறு சாதனைகளையும் ட்ராவிஸ் ஹெட் உடைத்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல் காபா மைதானத்தில் கடைசியாக விளையாடிய 3 இன்னிங்ஸ்களிலும் ட்ராவிஸ் ஹெட் முதல் பந்திலேயே ஆட்டமிழந்து டக் அவுட்டாகி வெளியேறி இருந்தார். ஆனால் இம்முறை இந்திய அணிக்கு எதிராக மட்டும் பொளந்து கட்டி வருகிறார். பும்ரா, சிராஜ், ஆகாஷ் தீப், ஜடேஜா என்று யார் பவுலிங் செய்தாலும் ட்ராவிஸ் ஹெட்டை கட்டுப்படுத்த முடியவில்லை.
2018-19 மற்றும் 2020-21 ஆகிய பார்டர் கவாஸ்கர் டிராபி தொடர்களில் இந்திய அணி புஜாரா இப்படியான ஆதிக்கத்தை தான் ஆஸ்திரேலியா அணி மீது செலுத்தி வந்தார். 2018-19 பார்டர் கவாஸ்கர் டிராபியில் மட்டும் 1,258 பந்துகளை எதிர்கொண்டு 521 ரன்களை விளாசினார். அதேபோல் 2020-21 பார்டர் கவாஸ்கர் டிராபியில் 928 பந்துகளை எதிர்கொண்டார்.
ஆஸ்திரேலியா அணியின் நட்சத்திர பவுலரான ஹேசல்வுட் அந்த அணியின் ஆலோசனை கூட்டத்தில் புஜாராவின் புகைப்படத்தை கூட பார்க்க விரும்பவில்லை என்று விரக்தியை வெளிப்படுத்தி இருந்தார். அந்த அளவிற்கு ஆஸ்திரேலியா பவுலர்களின் மூளைக்குள் புஜாரா சிக்கலை கொடுத்தார். தற்போது அதே ஆதிக்கத்தை இந்திய அணி மீது ஆஸ்திரேலியா வீரர் ட்ராவிஸ் ஹெட் செலுத்தி வருகிறார்.
ஒரு காலத்தில் பாகிஸ்தான் அணிக்காக ஆடிய சல்மான் பட் இந்திய அணியை கண்டால் மட்டும் சதங்களாக விளாசுவார். அவர் அடித்த 5 சதங்களும் இந்திய அணிக்கு எதிராக தான் அமைந்தது. அதுபோல் இந்திய அணியை கண்டாலே ட்ராவிஸ் ஹெட் பொளந்து கட்டி வருவதாக ரசிகர்கள் சோகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இவரை வீழ்த்துவதற்கான வழியை விரைவில் கண்டறியவில்லை என்றால், இந்திய அணிக்கு மிகப்பெரிய சிக்கல் உருவாகும் என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.