அடிலெய்டு: இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் முகமது சிராஜுக்கு ஒரு போட்டியில் ஆட தடை விதிக்கப்படலாம் என முன்னாள் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மார்க் டெய்லர் எச்சரிக்கை விடுத்து இருக்கிறார். டிராவிஸ் ஹெட் விக்கெட்டை வீழ்த்திவிட்டு சிராஜ் ஆக்ரோஷமாக நடந்து கொண்ட விதம் பற்றியும், அம்பயர் அவுட் கொடுக்கும் முன்பே அதை கொண்டாடுவது பற்றியும் கடும் விமர்சனத்தை முன் வைத்து இவ்வாறு எச்சரிக்கை விடுத்து இருக்கிறார் மார்க் டெய்லர்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் ஆடி வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட் சதம் அடித்தார். அவர் 140 ரன்கள் எடுத்து முகமது சிராஜ் பந்து வீச்சில் பவுல்ட் அவுட் ஆனார். ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 337 ரன்கள் எடுத்தது. இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 180 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ஆஸ்திரேலியா 157 ரன்கள் முன்னிலை பெற்றது.

ஆஸ்திரேலியா இந்த அளவுக்கு முன்னிலை பெற முக்கிய காரணமாக இருந்தது டிராவிஸ் ஹெட் தான். இந்த நிலையில் அவரது விக்கெட்டை வீழ்த்தி விட்டு முகமது சிராஜ் ஆக்ரோஷமாக கொண்டாடினார். அப்போது ட்ராவிஸ் ஹெட் ஏதோ ஒன்றை சொல்ல, சிராஹ் அவரது முகத்துக்கு நேராக சென்று சில வார்த்தைகளை பேசினார். அது சர்ச்சையாக மாறியது.
அது மட்டும் இன்றி இந்த போட்டி முழுவதும் முகமது சிராஜ் பந்து வீசிவிட்டு அம்பயர் எல்பிடபுள்யூ பற்றி தனது முடிவை சொல்லும் முன்பே, அதை விக்கெட்டாக நினைத்து கொண்டாட்டமான மனநிலையுடன் நடந்து கொண்டார் சிராஜ். இதுவும் சர்ச்சைக்குரிய விஷயமாக இருந்தது. இது பற்றி முன்னாள் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மார்க் டெய்லர் எச்சரிக்கை விடும் வகையில் பேசி இருக்கிறார்.
முகமது சிராஜ் நடவடிக்கைகள் பற்றி மார்க் டெய்லர் பேசியதாவது - "யார் முகமது சிராஜை தூண்டினார்கள்? என்று தெரியவில்லை. ஆனால், இது பார்ப்பதற்கு நன்றாக இல்லை. ஒருவர் 140 ரன்கள் அடித்து ஆட்டம் இழக்கும் போது இப்படி நடந்து கொள்வது நிச்சயமாக நன்றாக இல்லை. இந்திய அணியில் யாரேனும் ஒருவர் முகமது சிராஜிடம் இது பற்றி பேச வேண்டும்."
"சிராஜ் போட்டி மனப்பான்மை உள்ளவராக இருப்பதும், நல்ல பவுலராக இருப்பதையும் நான் விரும்புகிறேன். ஆனால், ஒரு பேட்ஸ்மேனின் காலில் பந்து பட்டவுடன், அது எல்பி டபிள்யூ என நினைத்து பிட்ச் முழுவதும் ஓடி, பேட்ஸ்மேனை கடந்து, விக்கெட் கீப்பர் வரை சென்று அதை கொண்டாடிவிட்டு அம்பயரிடம் அவுட்டா? என கேட்பது சரி இல்லை. அதை நான் விரும்பவில்லை."
"இது நிச்சயம் நிறுத்தப்பட வேண்டும். விரைவில் இதை அவர் நிறுத்தவில்லை என்றால் அம்பயரோ அல்லது மேட்ச் ரெஃப்ரீயோ அவரை நிறுத்தக்கூடும். ஒரு போட்டியில் அவருக்கு தடை விதிக்கப்படலாம். அதை யாரும் விரும்பவில்லை. ரோஹித் சர்மா அல்லது விராட் கோலி ஆகியோர் அவரிடம் சென்று இதுபற்றி பேச வேண்டும்."
"உற்சாகமாக இருக்கலாம். பேட்ஸ்மேனின் முகத்துக்கு நேராக சென்று கொண்டாடலாம். ஆனால், இதுபோல விக்கெட் எடுக்காமல் அதை கொண்டாடுவது இந்த விளையாட்டுக்கும், அம்பயருக்கும் செய்யப்படும் அவமரியாதை என்பதை அவருக்கு சொல்ல வேண்டும்" என்றார் மார்க் டெய்லர்.