பிரிஸ்பேன்: ஆஸ்திரேலியா அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் மிட்சல் ஸ்டார்க் பவுலிங்கில் 3வது முறையாக இந்திய தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆட்டமிழந்து வெளியேறியுள்ளார். இதற்கான காரணம் குறித்து வர்ணனையில் இருந்த மைக்கில் வாஹன் மற்றும் ரவி சாஸ்திரி இருவரும் பேசியது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
சர்வதேச கிரிக்கெட்டை பொறுத்தவரை ஸ்லெட்ஜிங் என்பது இருமுனை கத்தியை போன்றது. ஒருமுறை நாம் அடி கொடுத்தால், அதற்கான பதிலடி வாய்ப்பு அந்த வீரருக்கும் அமையும். இதுவே ஒரு வகையான அழுத்தத்திற்கு வீரர்களை தள்ளிவிடும் என்று பலரும் கூறியுள்ளனர். இதன் காரணமாகவே புஜாரா, ரஹானே உள்ளிட்டோர் ஸ்லெட்ஜிங் பக்கமே செல்ல மாட்டார்கள்.

பெர்த் டெஸ்ட் போட்டியில் ஸ்டார்க்கை, உங்கள் பந்தின் வேகம் குறைவாக இருக்கிறது என்று ஜெய்ஸ்வால் கூறியது பலருக்கும் வியப்பை கொடுத்தது. அதன்பின் மிட்சல் ஸ்டார்க் விஸ்வரூபம் எடுத்துவிட்டார். ஏனென்றால் 3 டெஸ்ட் போட்டிகளின் முதல் இன்னிங்ஸிலும் ஜெய்ஸ்வாலை வீழ்த்தி மிட்சல் ஸ்டார்க் மரண கம்பேக்கை கொடுத்துள்ளார்.
இதனால் சதத்தை தவிர்த்து, ஜெய்ஸ்வால் 0, 0, 4 மற்றும் 24 ஆகிய ரன்களை மட்டுமே சேர்த்துள்ளார். இன்றைய இன்னிங்ஸில் கூட முதல் பந்தில் பவுண்டரியை விளாசிய ஜெய்ஸ்வால், 2வது பந்தை மிட் விக்கெட்டில் ஃபீல்டரை தேடி கேட்ச் கொடுத்து விக்கெட்டை பறிகொடுத்துள்ளார். இதுகுறித்து மைக்கில் வாஹன் மற்றும் ரவி சாஸ்திரி பேசுகையில், இன்றைய ஆட்டம் தொடங்குவதற்கு முன்பாக ஜெய்ஸ்வாலின் பயிற்சியை பார்த்து கொண்டிருந்தேன்.
அப்போது அவரின் கால்களில் வீசப்பட்ட பந்தை, எளிதாக ஃபிளிக் செய்து பறக்கவிட்டார். அந்த பந்து நேராக ஆஸ்திரேலியா கேமரா மேனுக்கு பக்கத்தில் சென்று விழுந்தது. அப்போது ஆலோசனை மேற்கொண்ட ஆஸ்திரேலியா வீரர்கள் பலரும் ஆச்சரியமடைந்தனர். ஆனால் அதே பந்தை ஆட்டத்தை வீசிய போது, மிட் விக்கெட்டில் நின்ற ஃபீல்டரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறி இருக்கிறார்.
இதற்கு முழுக்க முழுக்க அழுத்தம் மட்டுமே காரணம். இந்தப் போட்டி தொடங்குவதற்கு முன்பாகவே ஸ்டார்க்கை ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்று முடிவு செய்து ஜெய்ஸ்வால் களமிறங்குகிறார் என்று தெரிவித்தனர். கிட்டத்தட்ட ஜெய்ஸ்வால் குறித்து மைக்கில் வாஹன் மற்றும் ரவி சாஸ்திரி இருவரும் கூறியது ஏற்புடையதாக இருக்கிறது.
ஆஸ்திரேலியா மண்ணில் முதல் 15 ஓவர்கள் நிதானம் காட்டினால் மட்டுமே பேட்ஸ்மேன்களால் ரன்களை சேர்க்க முடியும். அதனை விடுத்து முதல் சில ஓவர்களிலேயே அட்டாக் செய்ய வேண்டும் என்று முயற்சித்தால், அது அந்த வீரருக்கு மட்டுமல்லாமல் இந்திய அணிக்கும் பின்னடைவையே ஏற்படுத்தும் என்று விமர்சிக்கப்பட்டு வருகிறது.