பெர்த்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய வேகப் பந்துவீச்சாளர் ஹர்ஷித் ராணா மற்றும் ஆஸ்திரேலியா அணியின் வேகப் பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் இடையே சீண்டல் சம்பவம் நடைபெற்றது. அதன் முடிவில் ஹர்ஷித் ராணா, மிட்செல் ஸ்டார்க் ஹெல்மெட்டை பதம் பார்த்தார்.
பெர்த்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 150 ரன்கள் மட்டுமே எடுத்தது. அடுத்து ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்து வந்தது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 67 ரன்களுக்கு 7 விக்கெட்களை இழந்து இருந்தது.

இரண்டாவது நாள் அன்று 79 ரன்களுக்கு 9 விக்கெட்களை இழந்தது. அதன் பின் மிட்செல் ஸ்டார்க் மற்றும் ஜோஷ் ஹேசல்வுட் இணைந்து நிதானமாக ரன் சேர்த்தனர். மிட்செல் ஸ்டார்க் 100 பந்துகளுக்கு மேல் சந்தித்து இந்திய அணியை சோதித்தார். அப்போது அறிமுக வீரரான ஹர்ஷித் ராணா, மிட்செல் ஸ்டார்க்குக்கு பந்து வீசினார்.
அப்போது ஸ்டார்க் அவரிடம், "உன்னை விட நான் வேகமாக பந்து வீசுவேன். எனக்கு நல்ல நினைவு உள்ளது" என்றார். ஹர்ஷித் ராணா மற்றும் மிட்செல் ஸ்டார்க் 2024 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் ஒன்றாக விளையாடியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இருவரும் இணைந்து அந்த அணியின் பவர் பிளே ஓவர்களை வீசி இருந்தனர்.
அப்போது ஹர்ஷித் ராணா குறைவான வேகத்தில் பந்து வீசியதை குறிப்பிட்டு கிண்டல் செய்தார் மிட்செல் ஸ்டார்க். அவரால் வேகமாக பந்து வீச முடியாது என சொல்லி இருந்தார். அதற்கு உடனடியாக பதிலடி கொடுத்த ஹர்ஷித் ராணா ஒரு பவுன்சர் பந்து வீசினார். அது மிட்செல் ஸ்டார்க் ஹெல்மட்டை பதம் பார்த்தது.
உடனடியாக ஹர்ஷித் ராணா ஓடி வந்து மிட்செல் ஸ்டார்க்குக்கு என்ன ஆனது? என்று பார்த்தார். அதன் பின் அவருக்கு மூளை அழற்சிக்கான பரிசோதனை செய்யப்பட்டது. அதன் பின் ஸ்டார்க் தொடர்ந்து பேட்டிங் செய்தார். ஸ்டார்க் 112 பந்துகளை சந்தித்து 26 ரன்கள் எடுத்து ஹர்ஷித் ராணா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 104 ரன்களுக்கு ஆல் - அவுட் ஆனது. இந்திய அணி 46 ரன்கள் முன்னிலை பெற்றது.