ராஜ்கோட்: இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கும் நிலையில் நிலையில் இந்திய அணியின் முன்னணி வேகப் பந்துவீச்சாளர் முகமது ஷமி அந்த அணியில் இடம் பெறுவாரா? என்ற கேள்வி அனைவருக்கும் உள்ளது. 2023 ஒருநாள் போட்டி உலகக்கோப்பை தொடருக்கு பின் முகமது ஷமி இந்திய அணியில் இடம் பெறவில்லை.
அவருக்கு காலில் காயம் இருந்ததால் அதற்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டார். பின்னர் அதில் இருந்து மீண்டு வந்து, தற்போது உள்ளூர் போட்டிகளில் விளையாடி வருகிறார். இந்த நிலையில், முகமது ஷமியை கண்காணிக்க மூன்று பேர் குழுவை அமைத்து இருக்கிறது பிசிசிஐ.

ஆஸ்திரேலியாவில் இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அதில் முதல் போட்டி முடிந்துள்ளது. இரண்டாவது போட்டி டிசம்பர் 6 அன்று துவங்க உள்ளது. அந்த போட்டிக்கு முன் முகமது ஷமியை இந்திய அணியில் சேர்க்கலாமா? என்பது பற்றி அறியவே இந்த குழுவை பிசிசிஐ நியமித்து உள்ளது.
இந்த மூவர் குழு பற்றிய தகவல்கள் பிசிசிஐ வட்டாரத்தில் இருந்து வெளியாகி உள்ளது. பிசிசிஐ ஸ்போர்ட்ஸ் சயின்ஸ் துறையை சேர்ந்த நித்தின் பட்டேல், உடற்பயிற்சி பயிற்றுனர் நிஷாந்த் பர்துலே மற்றும் தேர்வுக் குழு உறுப்பினர் சிவசங்கர் தாஸ் ஆகிய மூவரும் முகமது ஷமியை கண்காணித்து வருகின்றனர்.
தற்போது முகமது ஷமி சையது முஷ்டாக் அலி டி20 தொடரில் பெங்கால் அணியில் இடம் பெற்று விளையாடி வருகிறார். அவர் ராஜ்கோட்டில் இருக்கும் நிலையில் அவர்கள் மூவரும் அவருடன் ராஜ்கோட்டில் முகாமிட்டு உள்ளனர். முகமது ஷமியின் பந்துவீச்சு எப்படி உள்ளது என்றோ, அவரது வேகம் எப்படி இருக்கிறது என்றோ அவர்கள் கண்காணிக்கவில்லை.
மாறாக அவரால் டெஸ்ட் போட்டிகளில் ஐந்து நாட்களுக்கு தாக்குப் பிடித்து பந்து வீச முடியுமா? அதற்கான உடற் தகுதியை அவர் பெற்று இருக்கிறாரா? என்பதை மட்டுமே கண்காணித்து வருகின்றனர். இவர்கள் அளிக்கும் அறிக்கையை வைத்து முகமது ஷமியை ஆஸ்திரேலியாவுக்கு உடனடியாக அனுப்பலாமா? அல்லது சற்று தாமதித்து, மேலும் கண்காணித்து அனுப்பலாமா? என்ற முடிவை பிசிசிஐ நிர்வாகம் எடுக்க உள்ளது.