தந்தை மரணம்.. இறுதிச் சடங்குக்கு செல்ல முடியாது.. தவிக்கும் இளம் இந்திய வீரர்.. உருக்கம்
சிட்னி : இந்திய டெஸ்ட் அணியில் முதல் முறையாக வாய்ப்பு பெற்றுள்ள இளம் வேகப் பந்துவீச்சாளர் முகமது சிராஜின் தந்தை ஹைதராபாத்தில் மரணம் அடைந்தார்.
அவருக்கு நுரையீரலில் பாதிப்பு இருந்தது. அதனால் அவதிப்பட்டு வந்த அவர் வெள்ளிக்கிழமை அன்று மரணம் அடைந்தார்.
ஆஸ்திரேலியாவில் இந்திய அணியுடன் குவாரன்டைனில் இருக்கிறார் முகமது சிராஜ். அவரால் தந்தையின் இறுதிச் சடங்கிற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

சாதனை வீரர்
சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் ஒரே போட்டியில் இரண்டு மெய்டன் ஓவர்கள் வீசி சாதனை படைத்து இருந்தார் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் வேகப் பந்துவீச்சாளர் முகமது சிராஜ். அந்தப் போட்டிக்கு முன் அவரது தந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

ஆட்டோ ஓட்டினார்
சிராஜின் தந்தை கோஸ் ஹைதராபாத்தை சேர்ந்தவர். 53 வயதான அவர் ஆட்டோ ஓட்டி தன் மகனின் கிரிக்கெட் கனவை நிறைவேற்ற போராடினார். அவரது கனவை நிறைவேற்றிய முகமது சிராஜ் இந்திய அணியில் ஒரு ஒருநாள் போட்டியிலும், மூன்று டி20 போட்டியிலும் ஆடி உள்ளார்.

மருத்துவமனையில் தந்தை
ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் வேகப் பந்துவீச்சாளராக 2020 சீசனில் சிறப்பாக செயல்பட்டார். தன் தந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அந்தப் போட்டியில் அவர் சாதனை படைத்தார். அதன் பின் அவர் தந்தை உடல்நிலை முன்னேறியது.

தந்தை மரணம்
ஐபிஎல் தொடர் முடிந்த நிலையில், முகமது சிராஜ் டெஸ்ட் அணியில் முதன் முறையாக தேர்வு செய்யப்பட்டார். ஐபிஎல் தொடருக்கு பின் அவர் இந்திய அணியுடன் ஆஸ்திரேலியா கிளம்பிச் சென்றார். இந்த நிலையில், அவரது தந்தை ஹைதராபாத்தில் நுரையீரல் பாதிப்பால் மரணம் அடைந்தார்.

ஆஸ்திரேலியாவில் லாக்டவுன்
ஆஸ்திரேலியாவில் இந்திய அணி வீரர்கள் தற்போது குவாரன்டைனில் இருக்கிறார்கள். அத்துடன் இந்தியா தங்கி இருக்கும் சிட்னி நகரம் உட்பட தெற்கு ஆஸ்திரேலியாவில் கடும் லாக்டவுன் விதிகள் கடந்த சில நாட்களாக அமலில் உள்ளது.

ஆறுதல்
இந்த நிலையில், முகமது சிராஜ் இந்தியா கிளம்பிச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தன் தந்தையின் இறுதிச் சடங்கில் பங்கேற்க செல்ல முடியாமல் தவிக்கும் அவருக்கு கேப்டன் கோலி மற்றும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆறுதல் கூறி சமாதானம் செய்ததாக கூறப்படுகிறது.

மாற்று வீரர்
டெஸ்ட் அணியில் மாற்று வீரராகவே முகமது சிராஜ் இடம் பெற்றுள்ளார். இஷாந்த் சர்மா காயம் காரணமாக அணியில் தற்காலிகமாக இடம் பெறவில்லை. அவர் விரைவில் ஆஸ்திரேலியா வந்து இந்திய அணியுடன் இணைய உள்ளார்.

அணியில் வாய்ப்பு?
எனவே, முகமது சிராஜ் டெஸ்ட் போட்டிகளில் ஆடுவது கடினமே. அவர் இந்தியா சென்றால் அதனால் இந்திய அணிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. எனினும், ஆஸ்திரேலியாவில் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் துவங்கி உள்ளதால் கடும் லாக்டவுன் விதிக்கப்பட்டுள்ளது. அதனால், அவர் தன் தந்தையின் இறுதிச் சடங்கில் பங்கேற்க இந்தியா செல்ல முடியாமல் சிக்கிக் கொண்டுள்ளார்.


Click it and Unblock the Notifications