பிரிஸ்பேன்: இந்திய அணியின் முகமது சிராஜ் செய்த மேஜிக் காரணமாக ஆஸ்திரேலியா அணியின் மார்னஸ் லபுஷேன் 12 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறி இருக்கிறார். பைல்ஸை மாற்றி வைத்து சிராஜ் விக்கெட்டுக்காக காத்திருந்த போது, நிதீஷ் குமார் ரெட்டி பந்தில் ட்ரைவ் அடிக்க முயன்று லபுஷேன் விக்கெட்டை பறிகொடுத்தார்.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி காபா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதல் நாள் ஆட்டத்தில் 13.2 ஓவர்களில் 28 ரன்கள் சேர்த்திருந்த போது, மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. இதன்பின் மழை நிற்காததால், முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் 2வது நாள் ஆட்டம் தொடங்கியது.

2வது நாள் ஆட்டத்தின் 3வது ஓவரிலேயே கவாஜாவின் விக்கெட்டை பும்ரா வீழ்த்த, தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரர் மெக்ஸ்வீனியும் 9 ரன்களில் வெளியேறினார். இதனால் ஆஸ்திரேலியா அணி 38 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதன்பின் லபுஷேன் - ஸ்டீவ் ஸ்மித் கூட்டணி இணைந்து பார்ட்னர்ஷிப் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டது.
பும்ரா மற்றும் ஆகாஷ் தீப் இருவருமே துல்லியமான லெந்தில் பவுலிங் செய்ததால், ஸ்மித் - லபுஷேன் கூட்டணி எந்த ரிஸ்கையும் எடுக்கவில்லை. நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர். இதன்பின் முகமது சிராஜ் மற்றும் நிதீஷ் குமார் ரெட்டி இருவரும் ஒரே ஸ்பெல்லில் வீச அழைக்கப்பட்டனர். வழக்கம் போல் லபுஷேன் நீண்ட நேரமாக டிஃபென்ஸில் மட்டுமே கவனம் செலுத்தினார்.
இதனால் லபுஷேனின் கவனத்தை சிதறடிக்கும் நோக்கில் 33வது ஓவரின் போது முகமது சிராஜ், லபுஷேன் நின்றிருந்த ஸ்டம்பின் பைல்ஸை மாற்றி வைத்து பார்த்தார். ஆஷஸ் தொடரின் போது இங்கிலாந்து ஜாம்பவான் ஸ்டூவர்ட் பிராட் இப்படியான செயல்களை செய்த போது உடனடியாக விக்கெட் கிடைத்தது. அதனை பின்பற்றி அவ்வப்போது விராட் கோலியும் செய்வார்.
இம்முறை சிராஜ் பைல்ஸை மாற்றி வைத்து மேஜிக் செய்ய முயற்சித்தார். ஆனால் சிராஜ் திரும்பி நடந்த போது, லபுஷேன் மீண்டும் பைல்ஸை மாற்றி வைத்தார். இதனால் ரசிகர்கள் கரகோஷம் எழுப்பி ஆதரவு அளித்தனர். அந்த ஓவரில் மேஜிக் நடக்கவில்லை என்றாலும், நிதீஷ் குமா ரெட்டி வீசிய 34வது ஓவரில் இந்தியாவுக்கு தேவையான மேஜிக் நிகழ்ந்தது.
நிதீஷ் குமார் ரெட்டி வீசிய ஃபுல்லர் லெந்த் பந்தில் கவர் ட்ரைவ் அடிக்க முயன்று லபுஷேன் பேட்டை விளாச, அது அவுட்சைடு எட்ஜாகி 2வது ஸ்லிப்பில் நின்றிருந்த விராட் கோலியின் கைகளில் சிக்கியது. இதனால் சோகமடைந்த லபுஷேன், 55 பந்துகளில் 12 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்த தொடரில் லபுஷேனின் விக்கெட்டை நிதீஷ் குமார் ரெட்டி 2வது முறையாக வீழ்த்தி இருப்பது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.