மெல்போர்ன்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி மிக மோசமாக விளையாடி வருகிறது. முதல் போட்டியில் பும்ராவின் கேப்டன்சியில் வென்ற இந்திய அணி, அடுத்த இரண்டு போட்டிகளில் ரோஹித் சர்மாவின் தலைமையில் மிக மோசமாக ஆடியது.
இரண்டாவது போட்டியில் தோல்வியடைந்த இந்திய அணி, மூன்றாவது போட்டியில் மழையின் உதவியுடன் போட்டியை டிரா செய்தது. இந்த நிலையில், மெல்போர்னில் நடந்து வரும் நான்காவது டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி மோசமான நிலையில் உள்ளது. இரண்டாம் நாள் முடிவில் ஃபாலோ ஆனை தவிர்க்க இந்திய அணி போராடி வருகிறது.

ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்து முதல் இன்னிங்க்ஸில் 474 ரன்கள் குவித்தது. அடுத்து இந்திய அணி முதல் இன்னிங்ஸ் பேட்டிங் ஆடியது. இரண்டாம் நாள் முடிவில் 169 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்து இருக்கிறது இந்திய அணி. ஃபாலோ ஆனை தவிர்க்க இன்னும் 110 ரன்கள் தேவை என்ற நிலையில் உள்ளது. முதல் இன்னிங்ஸில் இன்னும் 310 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது.
மெல்போர்ன் போட்டியை இந்திய அணி வெல்வது கடினமான ஒன்றாக மாறி உள்ளது. இதற்கு ரோஹித் சர்மாவின் கேப்டன்சி தான் முக்கிய காரணம் என முன்னாள் தேர்வுக் குழு தலைவர் எம்.எஸ்.கே பிரசாத் விளாசி இருக்கிறார். ரோஹித் சர்மா உடைய தனிப்பட்ட பேட்டிங் ஃபார்ம் ஒட்டுமொத்தமாக இந்திய அணியை பாதிப்பதாக அவர் குற்றம் சுமத்தி இருக்கிறார்.
இது பற்றி எம்.எஸ்.கே பிரசாத் பேசுகையில், "நாம் ரோஹித் சர்மாவின் கேப்டன்சி பற்றி அடிக்கடி பேசுகிறோம். இந்த தொடருக்கு வரும் முன் நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. அப்போது ஏற்பட்ட தோல்வி அவமானகரமாக இருந்தது. இந்திய கிரிக்கெட்டிலேயே மூன்று போட்டிகளை அடுத்தடுத்து தோற்றதே இல்லை."
"ரோஹித் சர்மா தான் அதற்கு முக்கிய காரணம் என அனைவரும் சுட்டிக் காட்டினார்கள். அந்த தொடரில் அவர் சுத்தமாக ரன்கள் எடுக்கவில்லை. ஆஸ்திரேலியாவிலும் அவர் முதல் போட்டியில் விளையாடவில்லை. அந்தப் போட்டியில் பும்ரா அணியை சிறப்பாக வழி நடத்தினார். எனவே, ரோஹித் சர்மா நியூசிலாந்து தொடரில் கிடைத்த அடுத்தடுத்த தோல்விகளுக்கு பின் ஆஸ்திரேலியாவுக்கு வந்தார்."
"அது அவரது ஆட்டத்தில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்று நான் நினைக்கிறேன். கேப்டன் இது போன்ற மோசமான ஃபார்மில் இருந்தால் அது அணியையும் நேரடியாக பாதிக்கும். அவர் தொடர் தோல்விகளுக்கு பின் வந்ததால் அவரது கேப்டன்சியிலும் அது வெளிப்படுகிறது."
"பல சந்தர்ப்பங்களில் ரோஹித் துரிதமாக செயல்படவில்லை. இந்த மெல்போர்ன் டெஸ்ட் போட்டியிலேயே எடுத்துக் கொண்டாலும் கூட முகமது சிராஜ் மற்றும் பும்ரா தொடர்ந்து 11 ஓவர்களை வீசினார்கள். அப்போது சாம் கோன்ஸ்டாஸ் விளாசிக் கொண்டு இருந்தார். அப்போது ரோஹித் பவுலரை மாற்றவில்லை. ரோஹித் சர்மாவின் கேப்டன்சி இந்த நிலையில் தான் இருக்கிறது. அவர் பேட்ஸ்மேன் ஆகவும், கேப்டனாகவும் தடுமாறிக் கொண்டு இருக்கிறார்." என்றார் பிரசாத்.