ராய்பூர் : இந்திய டி20 அணியில் இடம் பெற்று ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக முதல் இரண்டு டி20 போட்டிகளில் சிறப்பாக பந்து வீசிய முகேஷ் குமார் தன் திருமணத்துக்காக விடுப்பு எடுத்ததால் மூன்றாவது டி20 போட்டியில் அவர் பங்கேற்கவில்லை.
தற்போது திருமணத்தை முடித்து விட்டு அவர் இந்திய அணியுடன் இணைய இருக்கிறார். நான்காவது டி20 போட்டியில் முகேஷ் குமார் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக களமிறங்க இருக்கிறார்.
முகேஷ் குமார் இல்லாத நிலையில் இந்தியா கடைசி ஓவர்களில் ரன்களை கட்டுப்படுத்த முடியாமல் சொதப்பி மூன்றாவது போட்டியில் தோல்வி அடைந்து இருந்தது. கடைசி 2 ஓவர்களில் மட்டும் 45 ரன்களை வாரிக் கொடுத்து இந்தியா தோல்வி அடைந்தது.

ஆனால், முகேஷ் குமார் அணியில் இருந்த போது கடைசி ஓவர்களில் அதிக ரன் போகாமல் பார்த்துக் கொண்டார். முதல் போட்டியில் ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்த போது கடைசி ஓவரில் வெறும் 5 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார் அடுத்து இரண்டாவது டி20 போட்டியில் தன் முதல் 2 ஓவர்களில் 26 ரன்கள் விட்டுக் கொடுத்த முகேஷ் குமார், 15வது ஓவரை வீசி 7 ரன்களும், 20வது ஓவரை வீசி 10 ரன்களும் மட்டும் விட்டுக் கொடுத்து இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தார்.
அவர் மூன்றாவது போட்டியில் இல்லாத நிலையில் வேகப் பந்துவீச்சாளர் பிரசித் கிருஷ்ணா கடைசி ஓவரை வீசினார். அப்போது ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு 21 ரன்கள் தேவை என்ற நிலையில் ஐந்து பவுண்டரிகளை விட்டுக் கொடுத்து சொதப்பினார்.
முகேஷ் குமார் தன் திருமணம் முடிந்த அதே மகிழ்ச்சியோடு நான்காவது போட்டியில் அணிக்கு திரும்பினால் ஆஸ்திரேலிய அணிக்கு நிச்சயம் கடைசி ஓவர்களில் பின்னடைவு ஏற்படும். தீபக் சாஹரும் அணிக்கு திரும்பி இருப்பதால் ஆவேஷ் கான், பிரசித் கிருஷ்ணா நீக்கப்பட்டு முகேஷ் குமாரும், தீபக் சாஹரும் அணியில் சேர்க்கப்பட வாய்ப்பு உள்ளது.