மெல்போர்ன்: 122 ஆண்டுகள் சாதனை ஒன்றை முறியடித்து இருக்கிறார் நிதிஷ் குமார் ரெட்டி. மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் அவர் நேற்று சதம் அடித்து இருந்தார். இன்று தொடர்ந்து பேட்டிங் செய்த அவர் 114 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இதன் மூலம் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் எட்டாம் வரிசை அல்லது அதற்கும் கீழே பேட்டிங் செய்த வீரர்களிலேயே அதிக ரன் குவித்த வீரர் என்ற பெருமையை பெற்று இருக்கிறார் நிதிஷ் குமார் ரெட்டி.

மேலும், தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய எஸ் இ என் ஏ (SENA) எனப்படும் நான்கு நாடுகளில் எட்டாம் வரிசை அல்லது அதற்கும் கீழே பேட்டிங் செய்து அதிக ரன் குவித்த இந்திய வீரர் என்ற சாதனையையும் செய்து இருக்கிறார். இவற்றைப் பற்றி விரிவாக பார்க்கலாம்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதிய நான்காவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 474 ரன்கள் எடுத்தது. அடுத்து பேட்டிங் செய்த இந்திய அணி 221 ரன்களுக்கு 7 விக்கெட்களை இழந்து மோசமான நிலையில் இருந்தது. அப்போது வாஷிங்டன் சுந்தருடன் இணைந்து அபாரமாக ஆடிய நிதிஷ் குமார் ரெட்டி தனது முதல் டெஸ்ட் சதம் அடித்தார்.
வாஷிங்டன் சுந்தர் 50 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அதன் பின்னரும் அபாரமாக ஆடிய நிதிஷ் குமார் மொத்தமாக 114 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் எட்டாம் வரிசை அல்லது அதற்கும் கீழே பேட்டிங் இறங்கி அதிக ரன் குவித்த வீரர் என்ற சாதனையை செய்தார்.
இதற்கு முன் 1902 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலிய அணியின் ரெக்கி டஃப் என்ற வீரர் பத்தாம் வரிசையில் பேட்டிங் செய்து 104 ரன்கள் எடுத்து இருந்தார். அந்த 122 ஆண்டு சாதனையை முறியடித்து இருக்கிறார் நிதிஷ் குமார் ரெட்டி.
மேலும், தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நான்கு நாடுகளில் எட்டாம் வரிசை அல்லது அதற்கு கீழே பேட்டிங் இறங்கி அதிக ரன் குவித்த இந்திய வீரர்களில் முதல் இடத்தை பிடித்தார். 2007 ஆம் ஆண்டில் இங்கிலாந்து நாட்டில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் அனில் கும்ப்ளே 110 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்ததே இதுவரை அதிக ஸ்கோராக இருந்தது.
அதற்கு முன் 1990 ஆவது ஆண்டில் இங்கிலாந்தில் கபில் தேவ் 110 ரன்கள் எடுத்து இருந்தார். இந்த இரண்டு சாதனைகளையும் முறியடித்து இருக்கிறார் நிதிஷ் குமார் ரெட்டி. ஆஸ்திரேலிய மண்ணில் எட்டாம் வரிசையில் பேட்டிங் இறங்கி அவர் 114 ரன்கள் எடுத்து இருக்கிறார். மேலும், ஆஸ்திரேலிய மண்ணில் எட்டாம் வரிசை அல்லது அதற்கும் கீழே பேட்டி இறங்கி அதிக ரன் குவித்த வீரர்களில் இரண்டாவது இடத்தை பிடித்து இருக்கிறார்.
முன்னதாக இங்கிலாந்தின் மாட் ப்ரியார் சிட்னி போட்டியில் 118 ரன்கள் எடுத்து இருந்தார். அவருக்கு அடுத்து நிதிஷ் குமார் ரெட்டி தற்போது 114 ரன்கள் எடுத்து இருக்கிறார். நிதிஷ் குமாரின் அபார ஆட்டத்தால் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 369 ரன்கள் எடுத்தது.