பெர்த்: இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடர் வரும் 19ஆம் தேதி பெர்த் நகரில் நடைபெறுகிறது. இந்த போட்டி இந்திய நேரப்படி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு தொடங்கும்.
இந்தத் தொடரில் யார் வெல்லப் போகிறார்கள்? அதிக ரன்கள் குவிக்கப் போவது யார் என்பது குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் கணிப்பு வெளியிட்டு இருக்கிறார்.இது குறித்து பேசிய அவர், என்னைக் கேட்டால் இந்த தொடரில் அதிக ரன்கள் அடிப்பவராக ஒன்று விராட் கோலி இருப்பார்.

இல்லையென்றால் ரோகித் சர்மா இருப்பார் ஏனென்றால் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் இதுதான் அவர்களுக்கு கடைசியாக இருக்கும். எனவே ஏதேனும் சாதித்து தான் தொடரை விட்டு வெளியே செல்ல வேண்டும் என்று அவர்கள் நினைப்பார்கள்.
அதுமட்டுமில்லாமல் ஆஸ்திரேலிய மண்ணில் தொடக்க வீரராக களமிறங்குவதை விட நடுவரிசையில் களம் இறங்குவது தான் மிகவும் எளிது. இதன் காரணமாக ரோகித் சர்மா தொடக்க வீரராக விளையாடுவார் என்பதால் இந்த தொடரில் விராட் கோலி அதிக ரன்கள் குவிக்க வாய்ப்பு இருக்கின்றது.
இதேபோன்று இந்தியா ஆஸ்திரேலியா விளையாட போகும் நேரத்தில் மழை பெய்யுமா என்று எனக்கு தெரியவில்லை. அப்படி மழை இல்லை என்றால் ஆஸ்திரேலிய அணி இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் இந்த தொடரை கைப்பற்றும். இந்த தொடர் கடும் நெருக்கடியாக தான் அமையும். நான் ஆஸ்திரேலியாவை சேர்ந்தவன் என்பதால் நான் ஆஸ்திரேலியாவுக்கு தான் ஆதரவாக கணிப்பை வெளியிடுவேன்.
ஆனால் நான் அவ்வளவு நம்பிக்கையாக சொல்லவில்லை. எனினும் ஆஸ்திரேலியா வெல்லும் என்று என்னுடைய உள்ளுணர்வு சொல்கின்றது என மைக்கேல் கிளாக் தெரிவித்துள்ளார். கடைசியாக 2020- 21 ஆம் ஆண்டு கொரோனா காலகட்டத்தில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி ஒருநாள் தொடரை ஒன்றுக்கு இரண்டு என்ற கணக்கில் இழந்தது. கடைசியாக 2018 -19 ஆம் ஆண்டு சுற்றுப்பயணத்தின் போதுதான் இந்திய அணி ஆஸ்திரேலிய மண்ணில் 2-1 என்ற கணக்கில் ஒரு நாள் தொடரை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.