மும்பை : இந்தியா - ஆஸ்திரேலியா இறுதிப் போட்டியின் போது ஆஸ்திரேலியாவை தோற்கடிக்க இந்தியா செய்த ஒரு வேலை இந்தியாவுக்கே பாதிப்பாக அமைந்து விட்டது. அதன் மூலம் நியாயம் கிடைத்துள்ளது எனக் கூறி முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் அதிர வைத்து இருக்கிறார்.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதிய உலகக்கோப்பை இறுதிப் போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டிக்கு முன்னதாக பிசிசிஐ, இறுதிப் போட்டிக்கான பிட்ச்சை மாற்றி விட்டதாக ஊடகங்களில் பேசப்பட்டது.
உலகக்கோப்பை தொடரில் இறுதிப் போட்டிக்கு முன் அகமதாபாத் மைதானத்தில் நான்கு போட்டிகள் நடந்து இருந்த நிலையில், அந்த நான்கு போட்டிகளிலும் பயன்படுத்தப்படாத பிட்ச்சை பயன்படுத்த ஐசிசி பிட்ச் ஆலோசகர் அறிவுறுத்தி இருந்தார்.

ஆனால், அதற்கு மாறாக இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடந்த பிட்ச்சை மைதான ஊழியர்கள் தயார் செய்தனர். அது குறித்து ஐசிசி ஆலோசகர் கேட்ட போது பிசிசிஐ தான் பிட்ச்சை மாற்றுமாறு கூறியதாக தகவல் வெளியானது. அதனால் போட்டிக்கு முன்பே இந்தியா பிட்ச்சில் சாதகமான வேலைகள் செய்வது வெளிப்படையானது.
ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தவே இந்தியா பிட்ச்சில் மாற்றங்கள் செய்கிறது. குறிப்பாக பிட்ச்சில் உள்ள புற்களை அகற்றி இருப்பதாகவும் மைதான ஊழியர் அளித்த பேட்டியின் மூலம் தெரிய வந்தது. இந்த நிலையில், ஆஸ்திரேலிய அணி எந்த பிட்ச்சாக இருந்தாலும் சமாளித்து ஆடுவோம் என சவால் விட்டு ஆடியது.
இறுதிப் போட்டியில் இந்தியா பேட்டிங் செய்ய தடுமாறியது. ஆனால், ஆஸ்திரேலிய அணி இரண்டாவதாக பேட்டிங் செய்து எளிதாக ரன் குவித்து வெற்றி பெற்றது. இதை அடுத்து போட்டியின் போதே பிட்ச்சில் செய்த மாற்றம் இந்திய அணிக்கே எதிராக மாறி விட்டது, அதன் மூலம் நியாயம் கிடைத்துள்ளது என முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் கூறினார்.
ஆஸ்திரேலிய அணியை வீழ்த்த பிட்ச்சை மாற்றிய இந்திய அணி, சொந்த செலவில் சூனியம் வைத்ததாக அவர் நேரலையில் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. ரிக்கி பாண்டிங் இது பற்றி சொன்னது - "இன்று மிக மிக மோசமான, இந்திய ஆடுகளம் அமைக்கப்பட்டது. அப்படி தயார் செய்யப்பட்ட பிட்ச் இந்தியாவிற்கே திருப்பி பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது மிகவும் நியாயமானது." என்றார் பாண்டிங்.