அடிலெய்டு: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டி பகல் - இரவு போட்டியாக நடைபெற உள்ளது. இந்த போட்டியில் பிங்க் நிற பந்து பயன்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா இதுவரை எத்தனை பகல் - இரவு போட்டிகளில் விளையாடி உள்ளது? அதில் பேட்டிங் மற்றும் பவுலிங்கில் சிறப்பாக செயல்பட்ட வீரர்கள் யார்? என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.
இந்திய அணி இதுவரை நான்கு பகல் இரவு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளது. அதில் மூன்று போட்டிகள் இந்திய மண்ணில் நடைபெற்றன. அந்த மூன்றிலும் இந்திய அணி வெற்றி பெற்றது. 2020 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த பகல் - இரவு டெஸ்ட் போட்டியில் மட்டுமே இந்திய அணி தோல்வி அடைந்தது.
2020இல் அடிலெய்டு மைதானத்தில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 36 ரன்களில் ஆல் அவுட் ஆகி தனது மிகக் குறைந்த டெஸ்ட் ஸ்கோரை பதிவு செய்து இருந்தது. இந்திய அணி ஆடிய நான்கு பகல் - இரவு டெஸ்ட் போட்டிகளில் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்ட வீரர் விராட் கோலி ஆவார். அவர் இந்த நான்கு பகல் - இரவு போட்டிகளில் 277 ரன்கள் எடுத்து இருக்கிறார். இதன் பேட்டிங் சராசரி 46.16 ஆகும்.

இரண்டாவது இடத்தில் ரோஹித் சர்மா இருக்கிறார். அவர் மூன்று பகல் - இரவு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 173 ரன்கள் எடுத்து இருக்கிறார். அவரது பேட்டிங் சராசரி 43.25 ஆகும்.
மூன்றாவது இடத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் இருக்கிறார். அவர் ஒரே ஒரு பகல் - இரவு டெஸ்ட் போட்டியில் மட்டும் விளையாடி, அதில் 155 ரன்கள் எடுத்து இருக்கிறார். அவரது சராசரி 79.5 ஆக உள்ளது. இந்த பகல் - இரவு டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்திய பந்து வீச்சாளராக ரவிச்சந்திரன் அஸ்வின் இருக்கிறார். அவர் நான்கு பகல் - இரவு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 18 விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார்,
இரண்டாவது இடத்தில் மற்றொரு சுழற் பந்துவீச்சாளர் அக்சர் பட்டேல் இருக்கிறார். அவர் இரண்டு போட்டிகளில் 14 விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார். மூன்றாவது இடத்தில் உமேஷ் யாதவ் இருக்கிறார். அவர் இரண்டு பகல் - இரவு டெஸ்ட் போட்டிகளில் 11 விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார்.