கான்பெர்ரா: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா பிரைம் மினிஸ்டர் லெவன் அணிகள் மோதும் பயிற்சி டெஸ்ட் போட்டி கான்பெர்ரா மைதானத்தில் துவங்கியது. நேற்று துவங்கியிருக்க வேண்டிய இந்த போட்டி மழையின் காரணமாக இன்று துவங்கியது. எனவே, இந்தப் போட்டியில் பேட்டிங் மற்றும் பவுலிங்கில் சில புதிய விதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.
இது பகல் - இரவு போட்டியாக நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் பிங்க் நிற பந்து பயன்படுத்தப்படும். இந்திய அணி அடுத்து அடிலெய்டில் பகல் - இரவு டெஸ்ட் போட்டியில் ஆட இருப்பதால் அதற்கு பயிற்சி பெறும் வகையில் இந்தப் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

இரண்டு நாட்கள் நடைபெறும் வகையில் திட்டமிடப்பட்டு இருந்த இந்த பயிற்சிப் போட்டியின் முதல் நாள் ஆட்டம் முழுவதுமாக மழையால் ரத்து செய்யப்பட்டது. இரண்டாவது நாளான இன்று மட்டுமே இந்த போட்டி நடைபெற உள்ளது. எனவே, இந்த போட்டியில் இரு அணிகளும் பயிற்சி பெறும் வகையில் சில விதிகள் மாற்றப்பட்டு உள்ளன.
அதன்படி இரண்டு அணிகளும் தலா 50 ஓவர்கள் பேட்டிங் செய்யும். எந்த விதமான ஃபீல்டிங் கட்டுப்பாடுகளும் இல்லை. மேலும், பந்துவீச்சாளர்கள் எத்தனை ஓவர்கள் வேண்டுமானாலும் வீசிக் கொள்ளலாம். எத்தனை வீரர்கள் வேண்டுமானாலும் பந்து வீசிக் கொள்ளலாம். பிளேயிங் 11 கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை என இரு அணிகளும் முடிவு எடுத்துள்ளன.
இதன் மூலம், இரண்டு அணிக்கும் பேட்டிங் செய்யும் வாய்ப்பும், பந்து வீசும் வாய்ப்பும் கிடைக்கும். இது இந்திய வீரர்களுக்கு நல்ல பயிற்சியாகவும் அமையும். இந்த போட்டியில் கேப்டன் ரோஹித் சர்மா மீண்டும் அணிக்கு திரும்பி இருப்பதால் அவரது பேட்டிங்கை பார்க்க ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.
இந்த போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியில் இடம் பெற்றுள்ள 19 உத்தேச வீரர்களும் இந்த போட்டியில் விளையாட வாய்ப்பு உள்ளது.
குறிப்பு: இந்தப் போட்டி துவங்கி 5 ஓவர்கள் முடிந்த நிலையில் சிறிது நேரம் மழை குறுக்கிட்டதால் போட்டி ஒரு அணிக்கு 46 ஓவர்களாக குறைக்கப்பட்டு உள்ளது. ஆஸ்திரேலியா பிரைம் மினிஸ்டர் லெவன் அணி 6 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 22 ரன்கள் எடுத்து உள்ளது.