ராய்பூர் : இந்திய அணியில் நிரந்தர இடம் பிடிப்பார் என கருதப்பட்ட பிரசித் கிருஷ்ணா, ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் இருந்து நீக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மூன்று போட்டிகள் முடிந்துள்ளன. முதல் இரண்டு போட்டிகளில் வென்ற இந்திய அணி, மூன்றாவது போட்டியில் தோல்வி அடைந்துள்ளது. அந்த தோல்விக்கு முக்கிய காரணம், வேகப் பந்துவீச்சாளர் பிரசித் கிருஷ்ணா தான்.
கடைசி ஓவரில் ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு 21 ரன்கள் தேவை என்ற நிலையில் பந்து வீசிய பிரசித் கிருஷ்ணா சரியாக பந்து வீசாததால் ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல் எளிதாக பவுண்டரிகளை அடித்து ஆஸ்திரேலியாவை வெற்றி பெறச் செய்தார்.

பிரசித் கிருஷ்ணா இந்த தொடர் முழுவதுமே மோசமான பந்துவீச்சை பதிவு செய்து இருக்கிறார். முதல் போட்டியில் 4 ஓவர்களில் 50 ரன்கள் கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தி இருந்தார். இரண்டாவது போட்டியில் 4 ஓவர்களில் 41 ரன்கள் கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தி இருந்தார், மூன்றாவது போட்டியில் 4 ஓவர்களில் 68 ரன்கள் கொடுத்து விக்கெட் ஏதும் வீழ்த்தவில்லை.
அவர் மூன்று போட்டிகளிலும் குறைந்தது ஓவருக்கு 10 ரன்களுக்கும் மேல் கொடுத்துள்ளார். அதிலும் மூன்றாவது போட்டியில் ஓவருக்கு சராசரியாக 17 ரன்கள் விட்டுக் கொடுத்தார். இரண்டாவது போட்டியில் அவர் எடுத்த 3 விக்கெட்களை தவிர அவருக்கு சாதகமாக எந்த விஷயமும் இல்லை.
மூன்றாவது போட்டியில் தன் திருமணம் காரணமாக வேகப் பந்துவீச்சாளர் முகேஷ் குமார் பங்கேற்காத நிலையில் மற்றொரு வேகப் பந்துவீச்சாளர் ஆவேஷ் கான் அணியில் இடம் பிடித்து 4 ஓவர்களில் 37 ரன்கள் கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தி இருந்தார். அவருக்கு அடுத்த போட்டியில் வாய்ப்பு கிடைக்கக் கூடும்.
முகேஷ் குமார் அணிக்கு திரும்பி இருக்கும் நிலையில், அவர் நான்காவது போட்டியில் அணியில் பங்கேற்பார். மேலும், வேகப் பந்துவீச்சாளர் தீபக் சாஹர் அணியில் சேர்க்கப்பட்டு இருக்கிறார். ஆவேஷ் கான் அல்லது தீபக் சாஹர் அணியில் சேர்க்கப்பட்டால் ஒரு வேக பந்துவீச்சாளரை நீக்க வேண்டும். அது பிரசித் கிருஷ்ணாவாக இருக்கவே வாய்ப்பு அதிகம்.