கான்பெர்ரா: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா பிரைம் மினிஸ்டர் லெவன் அணிகள் மோத இருந்த பயிற்சி போட்டியின் முதல் நாள் ஆட்டம் மழையால் வெகுவாக பாதிக்கப்பட்டு ரத்து செய்யப்பட்டது. ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
இந்த தொடரின் முதல் போட்டி பெர்த் மைதானத்தில் நடைபெற்றது. அந்தப் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டி பகல் - இரவு டெஸ்ட் போட்டியாக நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக இந்திய அணி ஒரு பயிற்சிப் போட்டியில் விளையாட திட்டமிடப்பட்டு இருந்தது.

ஆஸ்திரேலிய பிரைம் மினிஸ்டர் லெவன் அணிக்கு எதிராக இரண்டு நாட்கள் பகல் - இரவு பயிற்சிப் போட்டியில் இந்திய அணி விளையாட இருந்தது. இன்று (நவம்பர் 30) அந்தப் பயிற்சி போட்டி துவங்கி இருக்க வேண்டும். ஆனால், மழையின் காரணமாக பயிற்சிப் போட்டி திட்டமிடப்பட்டபடி துவங்கவில்லை. மழையின் காரணமாக டாஸ் போடுவதிலும் தாமதம் ஏற்பட்டது.
பயிற்சிப் போட்டியின் முதல் நாள் முழுவதும் கடுமையான மழை பெய்ததால் முதல் நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. நாளை (டிசம்பர் 1) இரண்டாவது நாள் அன்று பயிற்சி போட்டி நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. அப்போது மழை அதிகம் இருக்காது என வானிலை அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டு இருப்பதால் ஒருநாள் மட்டுமே இந்திய வீரர்கள் பயிற்சி செய்ய முடியும் என்ற நிலை ஏற்பட்டு இருக்கிறது.
இரண்டாவது டெஸ்ட் போட்டி அடிலெய்டு மைதானத்தில் டிசம்பர் 6 அன்று துவங்க உள்ளது. 2018 ஆம் ஆண்டு இதே அடிலெய்டு மைதானத்தில் நடந்த பகல் - இரவு டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 36 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது மீண்டும் அதை அடிலெய்டு மைதானத்தில் நடைபெற உள்ள பகல் - இரவு டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக இந்திய அணி பயிற்சிப் போட்டியில் ஆடுவதும் அவசியம் ஆகிறது.