ப்ரித்வி ஷாவுக்கு ஏற்பட்ட காயம்
முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக இந்தியா பயிற்சிப் போட்டியில் ஆடியது. அந்த போட்டியில் பீல்டிங் செய்த போது ப்ரித்வி ஷாவுக்கு கணுக்காலில் காயம் ஏற்பட்டது. அதனால், முதல் டெஸ்டில் ப்ரித்வி ஷா ஆட மாட்டார் என கூறப்பட்டது. தற்போதைய நிலையில், அவர் இரண்டாம் டெஸ்டில் ஆடுவதும் சந்தேகமே.
முரளி விஜய் - ராகுல் வாய்ப்பு பெற்றனர்
பயிற்சிப் போட்டிக்கு முன் ப்ரித்வி ஷாவோடு முரளி விஜய், ராகுல், இருவரில் யார் களம் இறங்குவார்கள்? என்ற விவாதம் இருந்தது. ப்ரித்விக்கு காயம் ஏற்பட்டதை அடுத்து, முரளி விஜய், ராகுல் இருவரும் துவக்க வீரர்களாக மாறினர்.
ராகுல் ஓரளவு தேறினார்
ராகுல் மீது தான் முன்பு கடும் விமர்சனம் இருந்தது. அதே போல முதல் டெஸ்டின் முதல் இன்னிங்க்ஸில் 2 ரன் மட்டுமே எடுத்தார். எனினும், இரண்டாம் இன்னிங்க்ஸில் 44 ரன்கள் எடுத்து ஓரளவு ஆறுதல் அளித்தார்.
முரளி விஜய் சொதப்பல்
பயிற்சிப் போட்டியில் சதம் அடித்த முரளி விஜய், 11, 18 என சொற்ப ரன்கள் எடுத்து ஏமாற்றம் அளித்தார். இங்கிலாந்து தொடருக்கு பின் அணியில் நீக்கப்பட்டு, கவுன்டி போட்டிகளில் ஆடி தன்னை நிரூபித்து, மூத்த வீரர் என்ற அடிப்படையில் அணியில் இடம் பெற்றார் முரளி விஜய். ஆனால், தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தவில்லை.
ப்ரித்வி ஷா மீண்டு வருவார்
ப்ரித்வி ஷா தற்போது ஓட ஆரம்பித்துள்ளார் என கூறப்படுகிறது. இரண்டாம் டெஸ்ட் முடிவில் அவர் வலை பயிற்சியில் ஈடுபட்டால், மூன்றாவது டெஸ்டில் ஆடுவது உறுதியாகி விடும். அந்த சமயத்தில் ராகுல், முரளி விஜய், இருவரில், முரளி விஜய்க்கு தான் சிக்கல் அதிகம்.