
துவக்க வீரர்கள் ரோஹித் - தவான்
இந்திய அணியில் துவக்க வீரர்களாக முதல் ஒருநாள் போட்டியில் களம் இறங்கிய ரோஹித் சர்மா - தவான், இரண்டாம் போட்டியிலும் களம் இறங்குவார்கள். கடந்த ஆண்டு மிகவும் வெற்றிகரமான துவக்க ஜோடியாக சர்வதேச அரங்கில் வலம் வந்தனர்.

தவான் டக் அவுட்
ரோஹித் முதல் போட்டியில் அற்புதமாக தன் 22வது சதத்தை அடித்தார்/ ஆனால், தவான் டக் அவுட் ஆகியுள்ளார். எனினும், அவர் அடுத்த இரண்டு போட்டிகளிலும் ஆடுவார் என்றே தெரிகிறது. இடை நீக்கம் செய்யப்பட்ட ராகுலுக்கு பதிலாக அணியில் சேர்க்கப்பட்ட ஷுப்மன் கில் நியூசிலாந்து தொடரில் மட்டுமே பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இருந்தே துவக்க வீரர்களில் பெரிய மாற்றம் இருக்காது என பிசிசிஐ மறைமுகமாக கூறியுள்ளது.

கோலி கை கொடுப்பாரா?
கோலி கடந்த போட்டியில் 3 ரன் மட்டுமே எடுத்து முக்கிய நேரத்தில் அணியை கை விட்டார். டெஸ்ட் தொடரிலும் கோலி தன் ரன் குவிப்பை காட்டவில்லை. அடுத்த இரண்டு போட்டிகளில் கோலி தன் இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவாரா? என்பதே ஒரே கேள்வியாக உள்ளது.

4வது இடத்தில் அம்பதி ராயுடு
இந்திய அணியில் சரியான பேட்ஸ்மேன் அமையாமல் இருந்த நான்காவது இடத்திற்கு சரியான பேட்ஸ்மேன் அம்பதி ராயுடு தான் என கேப்டனின் நம்பிக்கையை பெற்ற அம்பதி ராயுடு முதல் போட்டியில் டக் அவுட் ஆனார். அதன் பின் ரசிகர்கள் சிலர் அவரை அணியில் இருந்து நீக்க வேண்டும், என ஒரே போட்டியின் முடிவை வைத்து கூறி வருகின்றனர். ராயுடு இரண்டாம் போட்டியில் சொல்லிக் கொள்ளும் படி பேட்டிங் செய்யவில்லை என்றால் தன் இடத்தை இழக்கவேண்டிய நிலை ஏற்படலாம்.

கேதார் ஜாதவ்? X தினேஷ் கார்த்திக்?
முதல் போட்டியில் ஆடிய தினேஷ் கார்த்திக் இந்திய அணியின் சேஸிங்கில் கடைசி நேரத்தில் கை கொடுப்பார் என எதிர்பார்த்த வேளையில் ஆட்டமிழந்தார். அவரை மட்டுமே அதற்கு குறை சொல்ல முடியாது, என்றாலும் கேதார் ஜாதவ் அணியில் இருந்தால் பகுதி நேர பந்துவீச்சாளராகவும் இருப்பார் என்ற எண்ணம் உள்ளது. இரண்டாம் போட்டியில் ஜாதவ் அணியில் இடம் பெற அதிக வாய்ப்புள்ளது. தினேஷ் கார்த்திக் மீண்டும் காத்திருப்பில் இருக்க வேண்டியது தான்.

தோனி அதிரடி வேண்டும்
தோனி முதல் போட்டியில் அரைசதம் அடித்தது உண்மையிலேயே ரசிகர்களை குஷியில் ஆழ்த்தி உள்ளது. கடந்த ஆண்டின் மோசமான பேட்டிங்கை மறந்து விட்டு, இந்த ஆண்டு நேர்மறையாக துவங்கி உள்ளார் தோனி. முதல் போட்டியில் 96 பந்துகளில் 51 ரன்கள் எடுத்ததை சிலர் குறை கூறினாலும், தவறான அம்பயர் தீர்ப்பில் தான் தோனி அவுட்டானார். அவர் இன்னும் சிறிது நேரம் ஆடி இருந்தால் கடைசி நேரத்தில் அதிரடியை காட்டி இருப்பார். இரண்டாவது போட்டியில் அந்த அதிரடி நிகழுமா?

ஜடேஜா பேட்டிங்
ஜடேஜா பந்துவீச்சு மட்டுமல்லாது பேட்டிங்கிலும் கை கொடுப்பார் என்று தான் அணியில் சேர்க்கப்படுகிறார். ஆனால், அவர் பேட்டிங்கில் கை கொடுப்பதில்லை. முதல் போட்டியில் ஜடேஜா பேட்டிங்கில் சரியாக ஆடாத நிலையில், இரண்டாம் போட்டியில் அவரது இடத்தை புதிதாக அணியில் சேர்ந்துள்ள விஜய் ஷங்கர் எடுத்துக் கொள்வாரா? என்ற கேள்வி உள்ளது.

முன்னிலையில் புவனேஸ்வர் குமார்
பும்ரா இல்லாத நிலையில் இந்திய அணியின் பந்துவீச்சை முன்னின்று நடத்திச் செல்வது புவனேஸ்வர் குமார் தான். கடந்த போட்டியில் கடைசி ஓவரில் மட்டும் புவனேஸ்வர் 18 ரன்கள் கொடுத்தார். அது போன்ற சில தவறுகளை அவர் நிவர்த்தி செய்ய வேண்டும்.

ஷமி, கலீல் அஹ்மது பந்துவீச்சு எப்படி?
முதல் போட்டியில் ஷமி விக்கெட் எடுக்காவிட்டாலும் கட்டுக் கோப்பாக பந்து வீசி அசத்தினார். அதே சமயம், கலீல் அஹ்மது நேர்மாறாக அதிக ரன்கள் கொடுத்தார். கலீல் அஹ்மது புதிய வீரர் என்பதால் ஒரீரு போட்டிகளில் அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுக்கப்படும். மற்றொரு புதிய வீரர் சிராஜ்ஜிக்கு அணியில் களம் இறங்கும் வாய்ப்பு குறைவே.

குல்தீப் யாதவ்
குல்தீப் யாதவ் அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் என சொல்லுமளவிற்கு ஒவ்வொரு போட்டியிலும் தன் முத்திரையை பதித்து வருகிறார். விக்கெட்களை எடுப்பதிலும் சிறந்த பந்துவீச்சாளராக பெயர் எடுத்து விட்டார். இரண்டாவது போட்டியில் குல்தீப் சுழலில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் சிக்கினால், இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு அதிகரிக்கும்.


Click it and Unblock the Notifications