புஜாரா சதம்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது மற்றும் கடைசி டெஸ்டில் இந்தியா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. இந்திய அணி முதல் நாள் முடிவில் 303 ரன்களுக்கு 4 விக்கெட்கள் இழந்து ஆடி வந்தது. புஜாரா சதம் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
150 ரன்கள் கடந்தார்
இரண்டாம் நாள் ஆட்டத்தில் புஜாரா, ஹனுமா பேட்டிங்கை தொடர்ந்தனர். ஹனுமா 42 ரன்களில் சர்ச்சைக்குரிய முறையில் விக்கெட்டை இழந்தார். பின்னர், புஜாரா, ரிஷப் பண்ட்டுடன் இணைந்து 150 ரன்களை கடந்து ஆடி வந்தார்.
இரட்டை சதம் அடிப்பாரா?
புஜாரா 190 ரன்களை எட்டிய போது அனைவரிடமும் ஒரு பரபரப்பு தொற்றிக் கொண்டது. புஜாரா இரட்டை சதம் அடித்து ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் முத்திரை பதிப்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. எனினும், 193 ரன்களுக்கு தன் விக்கெட்டை இழந்தார் புஜாரா.
வாய்ப்பு நழுவியது
இதனால், அருமையான இரட்டை சதம் அடிக்கும் வாய்ப்பு 7 ரன்களில் நழுவியது. நாதன் லியோன் பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து தன் விக்கெட்டை இழந்தார் புஜாரா. நாதன் லியோனுக்கும், புஜாராவுக்கும் இடையே ஒரு போட்டி உள்ளது.
நாதன் லியோன் - புஜாரா
இது வரை 14 டெஸ்ட் போட்டிகளில் நாதன் லியோன் 9 முறை புஜாராவை ஆட்டமிழக்கச் செய்துள்ளார். ஒன்பதாவது முறையாக புஜாராவின் விக்கெட்டை வீழ்த்திய லியோன், அவரின் நான்காவது இரட்டை சதத்தை தடுத்துள்ளார்.
மூன்று இரட்டை சதங்கள்
புஜாரா இதற்கு முன் மூன்று இரட்டை சதங்கள் அடித்துள்ளார். அவை அனைத்துமே இந்தியாவில் நடைபெற்ற போட்டிகளில் அடித்தவை. இங்கிலாந்துக்கு எதிராக ஒரு முறையும், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இரண்டு முறையும் இரட்டை சதம் அடித்திருந்தார் புஜாரா.
அதிகபட்ச ரன் இதுவே
முதல் முறையாக வெளிநாட்டு மண்ணில் இரட்டை சதம் அடிக்க இருந்த வாய்ப்பை 7 ரன்களில் இழந்துள்ளார். எனினும், வெளிநாட்டு டெஸ்டில் புஜாரா அடித்த அதிகபட்ச ரன் சிட்னி டெஸ்டில் அடித்துள்ள 193 ரன்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இது மட்டுமே இந்திய ரசிகர்களுக்கு ஆறுதலாக அமைந்துள்ளது.