ராய்பூர் : இந்திய அணி சுழற் பந்துவீச்சாளர் ரவி பிஷ்னோய்-ஐ குறி வைத்து முதல் போட்டியில் ரன் குவித்தார் ஆஸ்திரேலிய வீரர் ஜோஷ் இங்லிஸ். ஆனால், அடுத்த இரண்டு போட்டிகளில் எல்லாமே தலைகீழாக மாறி அவரை சமாளிக்க முடியாமல் திணறி வருகிறார் ஜோஷ் இங்லிஸ்.
முதல் டி20 போட்டியில் ஜோஷ் இங்லிஸ், ரவி பிஷ்னோய்-ஐ குறி வைத்து ரன் குவித்த நிலையில், அதற்கு அடுத்த இரண்டு போட்டிகளிலும் சரியான பதிலடி கொடுத்து ஜோஷ் இங்லிஸ்-ஐ நிலைகுலைய வைத்து விட்டார் பிஷ்னோய்.
தற்போது நான்காவது டி20 போட்டியில் ஜோஷ் இங்லிஸ், ரவி பிஷ்னோய்-ஐ சமாளிப்பாரா? அல்லது ரவி பிஷ்னோய் மீண்டும் தன் பழி தீர்க்கும் படலத்தை தொடர்வாரா? என பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டு இருக்கின்றனர்.

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான டி20 தொடரின் முதல் போட்டியில் ஜோஷ் இங்லிஸ் சதம் அடித்தார். அவர் ரன் குவிக்க ரவி பிஷ்னோய் பந்துவீச்சை தான் குறி வைத்து ஆடினார். அந்தப் போட்டியில் ரவி பிஷ்னோய் வீசிய 15 பந்துகளை சந்தித்த ஜோஷ் இங்லிஸ் அதில் மட்டும் 49 ரன்களை குவித்தார். 2 ஃபோர், 6 சிக்ஸ் அடித்து இருந்தார். அதனால், அந்தப் போட்டியில் ரவி பிஷ்னோய் 4 ஓவர்களில் 54 ரன்கள் கொடுத்து இருந்தார்.
இதற்கு பழி தீர்க்கும் வகையில் அடுத்த இரண்டு டி20 போட்டிகளில் ரவி பிஷ்னோய் ஜோஷ் இங்லிஸ் விக்கெட்டை வீழ்த்தினார். அதுவும் ஒரு போட்டியில் தான் ஜோஷ் இங்லிஸ்-க்கு வீசிய முதல் பந்திலேயே வீழ்த்தினார். மற்றொரு போட்டியில் ஜோஷ் இங்லிஸ்-க்கு வீசிய இரண்டாவது பந்தில் அவர் விக்கெட்டை வீழ்த்தினார்.
15 பந்தில் 49 ரன்கள் அடித்ததற்கு பழி தீர்க்கும் வகையில் மூன்று பந்துகளில் 2 முறை விக்கெட் வீழ்த்தி இருக்கிறார் ரவி பிஷ்னோய். இவர்கள் இருவருக்கு இடையேயான இந்த மோதல் மிகவும் சுவாரசியமாக மாறி இருக்கிறது. நான்காவது டி20 போட்டியில் என்ன நடக்கப் போகிறது? யார், யாரை பழி தீர்க்கப் போகிறார்கள்? என ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.