சென்னை: இந்திய அணிக்கு தேர்வான பின்னரும் இளம் வீரர்களுக்கு எத்தனை சோதனைகள் இருக்கும் என்று அனுபவ வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு முறையும் இந்திய அணி தோல்வியடையும் போது ரசிகர்கள் மத்தியில் வேறு வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்திருக்கலாம் என்று விவாதிப்பது வழக்கமான ஒன்று தான். உலகக்கோப்பை தொடரில் சூர்யகுமார் யாதவ் சொதப்பிய போது கூட, அவரது இடத்தில் சஞ்சு சாம்சனை சேர்த்திருக்கலாம் என்று ரசிகர்கள் மத்தியில் விவாதிக்கப்பட்டது. ஆனால் இந்திய அணிக்கு வந்த பின்னர் கூட வீரர்களை நிர்வாகிகள் எடைப்போட்டு தான் வாய்ப்பை அளிப்பார்கள் என்று ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் பேசுகையில், ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியின் தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் மிகச்சிறந்த ஆட்டத்தை தொடர்ச்சியாக விளையாடி வருகிறார். அதேபோல் மலையாளத்தில் "அடி போலி" என்று கூறுவார்கள். அதுபோல் ஜெய்ஸ்வால் அதிரடியில் பொளந்து கட்டி வருகிறார். பவுலிங்கை பொறுத்தவரை ரவி பிஷ்னாயின் ஏர் ஸ்பீட் அற்புதமாக உள்ளது. பவர் பிளே ஓவர்களில் மிகச்சிறப்பாக பந்துவீசி வருகிறார்.
லெக் ஸ்பின்னும் முயற்சிக்கிறார் என்று கேள்விப்பட்டேன். அதனால் ஆடுகளத்தில் ஓரளவு ஸ்பின் இருந்தாலே, ரவி பிஷ்னாயால் மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும். முகேஷ் குமாரையும் நிச்சயம் பாராட்ட வேண்டும். அவரின் சீம் பொசிஷன் கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். கடைசியாக ரிங்கு சிங் தான் ஹீரோவாக இருக்கிறார். டெத் ஓவர்களில் அவரின் அமைதியும், அழுத்தத்தை எதிர்கொண்டு ரன்கள் சேர்ப்பதும் ஆச்சரியமான ஒன்றாக அமைந்துள்ளது.
இந்திய அணியில் வெறும் ரன்களையோ, விக்கெட்டையோ மட்டும் கணக்கில் வைத்து தேர்வு நடக்காது. அழுத்தத்தை எதிர்கொள்வது, தொடர்ச்சியாக சிறப்பாக விளையாடுகிறார்களா என்று பார்க்கப்படும். ஐபிஎல் தொடரில் 2 மாதம் சிறப்பாக விளையாட முடியும். ஐபிஎல் தொடரில் பெரிதாக சூழல்களும் மாறாது. ஆனால் சர்வதேச போட்டிகள் அப்படியல்ல. ஏராளமான நாடுகளுக்கு பயணம் செய்து, அங்குள்ள சூழல்களுக்கு தகவமைத்து கொண்டு விளையாட வேண்டும்.
அப்படி விளையாடும் போது கிரிக்கெட் வீரர்களுக்கு ஏற்ற, இறக்கங்கள் நிச்சயம் வரும். அது மிகவும் சாதாரண ஒன்றுதான். ஆனால் தோல்விகள் வரும் போது அதனை வீரர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பது முக்கியம். அவர் கடினமாக முயற்சிக்கிறாரா? துவண்டு போகிறாரா?, முன்பை விட அதிகமாக பயிற்சியில் ஈடுபடுகிறாரா? என்று உடனிருக்கும் நிர்வாகிகள், பயிற்சியாளர்கள், தேர்வு குழுவினர் அனைவரும் கவனிப்பார்கள். இவையெல்லாம் கவனிக்கப்பட்டு தான் வீரர்கள் தேர்வு இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.