அடிலெய்டு: இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வரும் நிலையில் இந்த தொடரில் அஸ்வினுக்கு ஒரு போட்டியில் கூட வாய்ப்பு கிடைக்காது என கூறப்படுகிறது. இந்த தொடரின் முதல் போட்டி நடந்து முடிந்துள்ள நிலையில் அதில் அஸ்வினுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
இந்திய அணியில் ஒரே ஒரு ஸ்பின்னராக வாஷிங்டன் சுந்தர் மட்டுமே இடம் பெற்றார். அனுபவ சுழற் பந்துவீச்சாளர்கள் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகிய இருவருக்கும் முதல் போட்டியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. அடுத்து இரண்டாவது போட்டி டிசம்பர் 6 அன்று நடைபெற உள்ளது.

அதற்கு முன்னதாக இரண்டு நாட்கள் பயிற்சிப் போட்டி நடைபெற்றது. அதிலும் அஸ்வினுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ரவீந்திர ஜடேஜாவுக்கு மட்டுமே ஒரு சில ஓவர்கள் பந்து வீச வாய்ப்பு அளிக்கப்பட்டது. இதன் மூலம், வாஷிங்டன் சுந்தர் இந்த ஆஸ்திரேலியா தொடரில் முதன்மை ஸ்பின்னர் ஆக இருக்கப் போகிறார் என்பது உறுதியாகி இருக்கிறது.
ஒரு போட்டியில் இரண்டு ஸ்பின்னர்கள் வேண்டுமென்ற நிலை ஏற்பட்டாலும் இரண்டாவது ஸ்பின்னர் ஆக ரவீந்திர ஜடேஜா தான் அணியில் இடம் பெறுவார் என கூறப்படுகிறது. அஸ்வின், நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்படவில்லை என்பது தான் அஸ்வினை புறக்கணிக்க காரணம் என கூறப்படுகிறது.
இந்திய மண்ணில் நடந்த நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் இந்திய அணி மூன்று போட்டிகளிலும் தோல்வி அடைந்திருந்தது. நியூசிலாந்து அணியின் சுழற் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு விக்கெட்கள் வீழ்த்திய நிலையில் இந்திய அணியின் அனுபவ சுழற் பந்துவீச்சாளரான அஸ்வினால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை.
மேலும், அவர் ஆஸ்திரேலிய மண்ணில் இதுவரை 18 இன்னிங்ஸ்களில் 39 விக்கெட்கள் மட்டுமே வீழ்த்தி உள்ளார். அதிகபட்சமாக ஒரு இன்னிங்ஸில் நான்கு விக்கெட்கள் வீழ்த்தி இருக்கிறார். அவருக்கு ஆஸ்திரேலியாவில் இதற்கு முன்பும் அதிக அளவில் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இந்த முறையும் அது தொடர்கிறது.
அஸ்வின் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியுடன் ஓய்வு பெறுவார் என கூறப்படும் நிலையில், அதற்கு முன்பு இந்திய அணி ஆட உள்ள கடைசி டெஸ்ட் தொடரான ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இந்த தொடரில் ஒரு போட்டியில் கூட ஆட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அடுத்து இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறினாலும் அதிலும் அஸ்வின் பிளேயிங் லெவனில் இடம் பெறுவது சந்தேகம்தான். ஏனெனில், அந்த இறுதி போட்டி இங்கிலாந்தில் நடைபெறும். இங்கிலாந்து ஆடுகளங்களிலும் அஸ்வின் சிறப்பான ரெக்கார்டை வைத்திருக்கவில்லை. எனவே, வாஷிங்டன் சுந்தர் இந்திய அணியின் முதன்மைப் ஸ்பின்னராக மாறிவிட்டதாகவே முன்னாள் வீரர்களும் சுட்டிக்காட்டி வருகின்றனர்.
வாஷிங்டன் சுந்தர் பேட்டிங்கிலும் கை கொடுப்பார் என்பதோடு, வேகப் பந்துவீச்சுக்கு சாதகமான வெளிநாட்டு ஆடுகளங்களில் அவர் பந்து வீசும் முறை இந்திய அணிக்கு பயனளிக்கும் என பயிற்சியாளர் கம்பீர் கருதுவதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது.