மும்பை: இந்திய அணியின் இளம் வீரர் ரிங்கு சிங் டி20 மட்டுமல்லாமல் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளிலும் சிறப்பாக விளையாடக் கூடிய திறமை கொண்டவர் என்று முன்னாள் வீரர் ஆஷிஷ் நெஹ்ரா பாராட்டியுள்ளார்.
இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி உள்ளிட்டோர் 35 வயதை கடந்துள்ள நிலையில், அடுத்த சூப்பர் ஸ்டார் வீரரை கண்டறியும் வகையில் பிசிசிஐ தீவிரமாக உள்ளது. அந்த வகையில் இந்திய அணியின் அடுத்த சூப்பர் ஸ்டார் வீரராக ரிங்கு சிங் இருப்பார் என்று பார்க்கப்படுகிறது. ஏனென்றால் குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் 5 பந்தில் 5 சிக்ஸ் அடித்து புகழ்பெற்ற அவர், அதன்பின் மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

இந்திய அணிக்காக ஆடி வரும் ரிங்கு சிங், 5வது வீரராக களமிறங்கி வேற லெவல் பேட்டிங்கை செய்து வருகிறார். கடந்த போட்டியில் ஃபினிஷிங் ரோலில் களமிறங்காமல் கொஞ்சம் மேல் வரிசையில் ஆடிய அவர், 29 பந்துகளில் 46 ரன்களை விளாசி தள்ளினார். இதன் மூலம் தவித்து கொண்டிருந்த இந்திய அணியை மீட்டெடுத்தார் என்ற சொல்லலாம். அதேபோல் ரிங்கு சிங் எந்தவித பதற்றமும், அழுத்தமும் இல்லாமல் ரன்கள் சேர்ப்பது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதேபோல் தனது திறமை மீது அபார நம்பிக்கை கொண்ட வீரர்களால் மட்டுமே ஃபினிஷிங்கில் சிறப்பாக செயல்பட முடியும். அந்த வகையில் தோனி, பென் ஸ்டோக்ஸ், மேக்ஸ்வெல் உள்ளிட்ட வீரர்களின் வரிசையில் விரைவில் ரிங்கு சிங்கும் இணைவார் என்று பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் விளையாட ரிங்கு சிங் தேர்வாகியுள்ளார். இதற்கு முதல்தர கிரிக்கெட்டில் அவரின் பேட்டிங் சராசரி 57.82ஆக இருப்பதே காரணமாகும்.
இதுகுறித்து முன்னாள் வீரர் ஆஷிஷ் நெஹ்ரா பேசுகையில், ரிங்கு சிங்கின் டி20 ஆட்டம் பற்றி மக்களுக்கு நன்றாக தெரியும். ஆனால் அவரின் ரஞ்சி டிராபி பேட்டிங் சராசரியை மக்கள் மறந்துவிட்டார்கள். அவர் ஒருநாள் கிரிக்கெட் அணிக்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தேர்வு குழுவினர் அவரை வைத்து நல்ல திட்டங்களை உருவாக்குகிறார்கள் என்று நினைக்கிறேன். எதிர்பார்த்ததற்கு முன்பாக பேட்டிங் செய்ய களமிறங்கினார் ரிங்கு சிங். அவர் டெத் ஓவர்களில் பேட்டிங் செய்து பலமுறை பார்த்திருக்கிறோம்.
ஆனால் கடந்த போட்டியில் ஆடிய ஆட்டத்திற்கு நிச்சயம் பாராட்டியாக வேண்டும். ஏனென்றால் அவரிடம் இருந்து அணி எப்போது அதிகமாக எதிர்பார்த்ததோ, அப்போது சிறப்பாக விளையாடி இருக்கிறார். ஒரு கட்டத்தில் இந்திய அணி 190 ரன்களை குவிக்க முடியும் என்ற நிலையில் இருந்தது. ஒருவேளை ரிங்கு சிங் வந்த வேகத்தில் ஆட்டமிழந்திருந்தால், 160 ரன்கள் எடுப்பதே கடினமாக மாறியிருக்கும். அவர் ஒருநாள் அணியில் தேர்வாகியுள்ளது இந்திய அணிக்கு சாதகமான ஒன்று. ஏனென்றால் அவரால் நீண்ட இன்னிங்ஸ்களை ஆட முடியும் என்று தெரிவித்துள்ளார்.