இந்திய வீரர்கள் ஆதிக்கம்
ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் இரு அணிகளையும் சேர்த்து அதிக ரன்கள் அடித்த வீரர்கள் யார் என பார்த்தால், முதல் மூன்று இடங்களில் இந்திய வீரர்கள் புஜாரா, ரிஷப் பண்ட் மற்றும் கோலி இருக்கின்றனர்.
கோலி பின்னே
கடந்த சில தொடர்களாக இந்திய அணியில் கோலி மட்டுமே பேட்டிங்கில் ரன் குவித்து முதல் இடத்தில் இருப்பார். மற்ற இந்திய பேட்ஸ்மேன்கள் அவருக்கு பின்னே தான் இருப்பார்கள். அதை இந்த ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் உடைத்துள்ளனர் ரிஷப் பண்ட் மற்றும் புஜாரா.
எத்தனை ரன்கள்?
இதுவரை இந்த ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் 7 இன்னிங்க்ஸ்களில் ஆடியுள்ள மூவரில் புஜாரா 521, ரிஷப் பண்ட் 350, கோலி 282 ரன்கள் எடுத்துள்ளனர். கோலியை விட மற்ற இருவரும் அதிக ரன்கள் அடித்துள்ளனர்.
புதிய ஒப்பந்தம்
இதையடுத்து, இவர்களுக்கு பிசிசிஐ ஒப்பந்தத்தை உயர்த்திக் கொடுக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. ரிஷப் பண்ட்டுக்கு "பி" பிரிவு ஒப்பந்தமும், புஜாராவுக்கு தற்போது இருக்கும் "ஏ" பிரிவில் இருந்து உயர்த்தி "ஏ+" பிரிவு ஒப்பந்தமும் வழங்க முயற்சிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
நிரந்தர இடம் பிடித்த பண்ட்
டெஸ்ட் அணியில் ரிஷப் பண்ட் தன் இடத்தை நிரந்தரமாக பிடித்துக் கொண்டுள்ளார். டி20 அணியிலும் ஆடி வருகிறார். அதனால், அவருக்கு உரிய வகையில் ஒப்பந்தம் வழங்க வேண்டும் என குரல்கள் எழுந்துள்ளன. தற்போது ஒப்பந்தம் இல்லாத நிலையில் அவர் "சி" பிரிவுக்குரிய சம்பளம் பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
புஜாராவுக்கு ஏ+ ஒப்பந்தம்
அதே போல, புஜாரா, டெஸ்ட் பேட்ஸ்மேன் என்பதால் அதிகபட்சம் அவரால் "ஏ" பிரிவில் மட்டுமே இருக்க முடியும். "ஏ+" பிரிவு ஒப்பந்தம் மூன்று வித கிரிக்கெட் போட்டிகளிலும் ஆடும் வீரர்களுக்கு மட்டுமே உரியது. மூத்த வீரர் தோனி மட்டுமே அதில் விதி விலக்கு.
புஜாராவுக்கு வருமானம் குறைவு
அதே போல, புஜாராவுக்கும் விலக்கு அளித்து அந்த ஒப்பந்தத்தில் சேர்க்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. புஜாராவை ஐபிஎல் அணிகள் சீண்டுவதில்லை. அதே போல அவருக்கு மற்ற முன்னணி வீரர்கள் போல அதிக விளம்பர வாய்ப்புகளும் வருவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.