தவான், பண்ட் சொதப்பல்
பேட்டிங்கில் ராகுல் 47, தோனி 40, கோலி 72* ரன்கள் என பட்டையைக் கிளப்பி அணியை 190 ரன்கள் வரை எட்டச் செய்தனர். எனினும், தவான், ரிஷப் பண்ட் பேட்டிங்கில் சரியாக ரன் குவிக்கவில்லை.
குறைந்த ரன்கள்
அவர்கள் இருவரும் ரன் குவிக்கவில்லை என்பதை விட பந்துகளை வீணடித்தது அணியின் ஸ்கோர் 200-ஐ தாண்டாமல் போனதற்கு காரணம். அவர்கள் இருவரும் சேர்ந்து 30 பந்துகளில் 15 ரன்கள் மட்டுமே எடுத்தனர்.
எத்தனை ரன்கள்?
தவான் துவக்கத்தில் நிதானமாக ஆடினார். அவர் 24 பந்துகளில் 14 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவர் சென்ற பின் பேட்டிங் ஆட வந்த ரிஷப் பண்ட் 6 பந்துகளில் 1 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.
மற்றவர்கள் ரன் குவிப்பு
இவர்கள் இருவர் தவிர மற்ற பேட்ஸ்மேன்கள் 90 பந்துகளில் 167 ரன்கள் குவித்தனர். இதில் இருந்தே இவர்களின் நிதான பேட்டிங் எந்த அளவு ரன் குவிப்பில் தடையாக இருந்துள்ளது என்பதை உணரலாம்.
ரிஷப் அழுத்தம்
ரிஷப் பண்ட் தான் சந்தித்த முதல் 5 பந்துகளில் 1 ரன் மட்டுமே எடுத்து அழுத்தம் ஏற்படுத்திக் கொண்டார். அதனால், ஆறாவது பந்தை அடிக்க முற்பட்டு ஆட்டமிழந்தார். டி20 போட்டிகளில் தேர்ந்த பேட்ஸ்மேன்களாக அறியப்படும் தவான், ரிஷப் பண்ட் இருவரும் இந்த போட்டியில் தடுமாறியது ஆச்சரியம் தான்.
கேட்ச் நழுவல்
இது தவிர ரிஷப் பண்ட் ஆஸ்திரேலிய வீரர் ஷார்ட் 36 ரன்கள் அடித்து இருந்த போது கொடுத்த கேட்ச்சை நழுவ விட்டார். அடுத்து இரண்டு ஓவர்கள் கழித்து ஷார்ட் 40 ரன்களில் வெளியேறினார். எனினும், அந்த கேட்ச்சை பிடித்திருந்தால், போட்டியின் போக்கில் மாற்றம் ஏற்பட்டிருக்கலாம்.