மெல்போர்ன்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் -பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் தனது விக்கெட்டை தாரை வார்த்தார், இதை அடுத்து அவர் மீது கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்திய அணி இக்கட்டான நிலையில் இருக்கும் போது அவர் ஆடிய ஷாட் தேவையற்ற ஒன்றாக இருந்தது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் ஆடி வரும் நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இரண்டாவது நாள் முடிவில் 164 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்து இருந்தது. ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 474 ரன்கள் எடுத்து இருந்தது. இரண்டாம் நாள் முடிவில் இந்திய அணி 310 ரன்கள் பின்தங்கிய நிலையில் இருந்தது. இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்களை இழந்து விட்ட நிலையில் களத்தில் இருந்த பண்ட் மற்றும் ஜடேஜா மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.

இந்த நிலையில் மூன்றாவது நாள் ஆட்டம் துவங்கியது. ரவீந்திர ஜடேஜா மற்றும் ரிஷப் பண்ட் தொடர்ந்து பேட்டிங் செய்தனர். ரிஷப் பண்ட் விரைவாக ரன் சேர்த்த நிலையில், ஜடேஜா நிதானமாக ஆடினார். இதனிடையே ஸ்காட் போலான்ட் வீசிய 56வது ஓவரில் மூன்றாவது பந்தை ரிஷப் பண்ட் லாப் ஷாட் அடிக்க முயன்று தடுமாறி கீழே விழுந்தார்.
அடுத்த பந்திலும் அவர் அதே போலத் தான் ஆடுவார் என யூகித்து பந்து வீசினார் ஸ்காட் போலான்ட். எதிர்பார்த்தது போலவே ரிஷப் பண்ட் கீழே குனிந்து ஸ்கூப் ஷாட் ஆட முயன்றார். ஆனால், பேட்டில் டாப் எட்ஜ் ஆன பந்து தேர்டு மேன் திசையில் நின்று இருந்த நாதன் லியோன் கைகளுக்கு நேராக சென்றது. நாதன் லியோன் சரியாக கேட்ச் பிடித்ததை அடுத்து ரிஷப் பண்ட் 28 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார்.
எப்போதுமே ரிஷப் பண்ட் இது போன்ற அதிரடி ஆட்டத்தை ஆடுபவர் என்றாலும் இந்திய அணி 5 விக்கெட்களை இழந்து, 300 ரன்களுக்கும் மேல் பின்தங்கிய நிலையில் இருக்கும்போது அவர் இவ்வாறு ஆடியது விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது. இது போன்ற ஷாட்டை ஆடுவதற்கான எந்த அவசியமும் இல்லை. ஆனால், அவர் ஏன் இப்படி செய்தார்? என கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.
சமூக வலைதளங்களில் ரிஷப் பண்ட் ஆட்டத்தை "மன்னிக்க முடியாது" என சில ரசிகர்கள் விளாசி வருகின்றனர். அதே சமயம், "ஆஸ்திரேலிய அணியின் இளம் வீரர் சாம் கோன்ஸ்டாஸ் இதே போல தானே ஆடினார். அவரை மட்டும் பாராட்டினீர்களே. ஒருவேளை ரிஷப் பண்ட் அடித்த ஷாட் கேட்ச் ஆகாமல், சிக்ஸ் ஆகியிருந்தால் அவரை பாராட்டி இருப்பீர்கள்." என சிலர் அவருக்கு ஆதரவாகவும் பேசி வருகின்றனர்.