
சதம்
ரிஷப் பண்ட் 2018ஆம் ஆண்டில் இந்திய அணியில் வாய்ப்பு பெற்றார். முதலில் டெஸ்ட் அணியில் இடம் பெற்ற அவர் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் போட்டிகளில் சதம் அடித்து, ஒருநாள் மற்றும் டி20 அணியில் தொடர்ந்து வாய்ப்பு பெற்றார்.

பார்ம் இழந்தார்
டெஸ்ட் போட்டிகளில் ஆடியது போல அவரால் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் ஆட முடியவில்லை. அதிரடி ஷாட்கள் ஆடி ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்து வந்தார். பேட்டிங் மட்டுமின்றி, விக்கெட் கீப்பிங்கிலும் சொதப்பி பார்ம் அவுட் ஆனார்.

கடும் விமர்சனம்
தோனியை பின்பற்ற முயன்று அவர் மோசமாக சொதப்பி வருவதாக அவர் மீது விமர்சனம் எழுந்தது. எனினும், அவர் தொடர்ந்து அணியில் இடம் பெற்று வந்தார். அவர் ஒரு போட்டியில் காயம் காரணமாக விலகிய போது கேஎல் ராகுல் விக்கெட் கீப்பிங் பணியை ஏற்றார்.

2020 ஐபிஎல்
ராகுல் சிறப்பாக விக்கெட் கீப்பிங் செய்ததை அடுத்து ரிஷப் பண்ட் இடத்தை அவருக்கு அளித்தார் கேப்டன் விராட் கோலி. இதை அடுத்து அணியில் மாற்று வீரராக மாறிய ரிஷப் பண்ட், 2020 ஐபிஎல் தொடரில் சிறப்பாக ஆடி அணியில் நிரந்தர இடம் பிடிக்க திட்டமிட்டார்.

அணியில் இடம் இல்லை
ஆனால், 2020 ஐபிஎல் தொடரில் ரிஷப் பண்ட் பெரிய அளவில் ஈர்க்கவில்லை. அவரை விட சஞ்சு சாம்சன், கேஎல் ராகுல், விரிதிமான் சாஹா என அவருக்கு போட்டியாக உள்ள விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக ஆடினார்கள். இதை அடுத்து அவருக்கு டி20 மற்றும் ஒருநாள் அணியில் இடம் மறுக்கப்பட்டது.

இது தான் காரணம்
தேர்வுக் குழு ரிஷப் பண்ட்டுக்கு இடம் மறுக்க அவரது அதிக உடல் எடை தான் காரணம் எனக் கூறினர். டெஸ்ட் அணியில் மட்டுமே அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அதிலும் அவருக்கு போட்டிகளில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்குமா? என்ற கேள்வி எழுந்தது.

சாஹா காயம்
டெஸ்ட் அணியின் முதன்மை விக்கெட் கீப்பர் விரிதிமான் சாஹா ஐபிஎல் தொடரின் பிளே-ஆஃப் சுற்றின் போது தசைப் பிடிப்பு காரணமாக அவதிப்பட்டார். அவர் டெஸ்ட் போட்டிகளில் ஆடுவது சந்தேகமாக மாறியது. அதன் காரணமாக ரிஷப் பண்ட்டுக்கு போட்டிகளில் ஆட வாய்ப்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.

மீண்டு வந்த சாஹா
ஆனால், விரிதிமான் சாஹா தற்போது காயத்தில் இருந்து மீண்டு பேட்டிங் பயிற்சி செய்யத் துவங்கி உள்ளார். அவர் ஐபிஎல் தொடரில் சிறப்பாக பேட்டிங் செய்ததை அடுத்து அவருக்கு டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

வாய்ப்பு கிடைக்காது
ரிஷப் பண்ட்டுக்கு டெஸ்ட் தொடரில் களமிறங்கும் வாய்ப்பு கிடைப்பது அரிதாக மாறி உள்ளது. முதல் இரண்டு போட்டிகளில் சாஹா சரியாக் ஆடவில்லை என்றாலோ, அவருக்கு காயம் ஏற்பட்டாலோ மட்டுமே ரிஷப் பண்ட்டுக்கு அணியில் இடம் கிடைக்கும்.

ஆஸ்திரேலிய தொடர் தான் கடைசி?
இந்த ஆஸ்திரேலியா தொடரே ரிஷப் பண்ட்டுக்கு கடைசி தொடராகவும் இருக்கலாம். இதை அடுத்து அவர் மீண்டும் அணியில் இடம் பெற 2021 ஐபிஎல் தொடரை தான் நம்ப வேண்டும். இந்திய அளவிலான உள்ளூர் போட்டிகள் நடப்பது கடினம் என்பதால் மீண்டும் அணியில் இடம் பெற பண்ட் காத்திருக்கும் நிலையும் ஏற்படலாம்.


Click it and Unblock the Notifications