மெல்போர்ன்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் ரிஷப் பண்ட் ஆட்டம் இழந்த விதம் ரசிகர்களின் மனதை நோகடித்தது. மெல்போர்ன் மைதானத்தில் நடந்த நான்காவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே இந்த தொடரையும், 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான வாய்ப்பையும் இந்திய அணி தக்க வைக்க முடியும் என்ற நிலை இருந்தது.
இந்த சூழ்நிலையில் இந்த போட்டியின் முதல் இன்னிங்க்ஸில் ஆஸ்திரேலியா 474 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் ஐந்து விக்கெட்களை இழந்து தடுமாறி வந்த போது ரிஷப் பண்ட் ஸ்கூப் ஷாட் ஆட முயன்று தனது விக்கெட்டை பறிகொடுத்தார். முதல் இன்னிங்ஸில் அது தேவையற்ற ஒரு ஷாட் ஆக இருந்தது.

அதை பார்த்த சுனில் கவாஸ்கர் ரிஷப் பண்ட்டை, "முட்டாள், முட்டாள், முட்டாள்" என மூன்று முறை திட்டினார். நேரலையில் அது ஒளிபரப்பானது. அப்போது சிலர் கவாஸ்கர் இப்படி பேசியிருக்கக் கூடாது என்றனர். ஆனால், இரண்டாவது இன்னிங்ஸில் மீண்டும் அதே தவறை செய்து இருக்கிறார் ரிஷப் பண்ட்.
அதைப் பார்த்து ரிஷப் பண்ட்டுக்கு ஆதரவாக பேசிய ரசிகர்களும் கூட மனம் நொந்து போய் இருக்கின்றனர். இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 340 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயித்தது. ஐந்தாம் நாள் ஆட்டம் மட்டுமே மீதமிருந்த நிலையில் இந்திய அணி டிரா செய்ய முடிவு எடுத்தது.
டிரா செய்ய வேண்டும் என்றால் ரன் குவிக்க வேண்டிய அவசியமே இல்லை. எந்த ஒரு பெரிய ஷாட்டையும் ஆட வேண்டிய அவசியமும் இல்லை. அதற்கு ஏற்ப ஜெய்ஸ்வாலுடன் சேர்ந்து கூட்டணி அமைத்து நிதானமாக ஆடி வந்தார் ரிஷப் பண்ட். 100 பந்துகளை தாண்டி அவர் ஆடிக் கொண்டிருந்த நிலையில் தேவையில்லாமல் ட்ராவிஸ் ஹெட் வீசிய பந்தில் பெரிய ஷாட் ஆட முயன்றார்.
ஆனால், கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட் ஆனார் பண்ட். போட்டியை டிரா செய்வதற்காக ஆடும் போது எதற்காக அவர் பெரிய ஷாட் அடிக்க வேண்டும்? அது மிகவும் முட்டாள்தனமான ஒன்று என்ற விமர்சனம் எழுந்தது. இதை அடுத்து சுனில் கவாஸ்கர், ரிஷப் பண்ட்டை மூன்று முறை முட்டாள் என சொன்னதில் எந்த தவறும் இல்லை என பெரும்பாலான ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வெளுத்து வாங்கினர்.
ரிஷப் பண்ட் இதுபோன்ற ஷாட்களை ஆடுவதாலேயே சிறந்த வீரராக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார். அது ஒருபுறம் இருந்தாலும் இது போன்ற ஷாட்களை டிரா செய்வதற்காக ஆடும் போது ஆட வேண்டுமா? என்பதே முக்கிய கேள்வியாக உள்ளது. இனியும் ரிஷப் பண்ட் இதுபோல பொறுப்பில்லாத ஷாட்களை ஆடி ஆட்டம் இழப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இனியும் இதே தவறை அவர் செய்தால் நிச்சயம் அவரை அணியை விட்டு நீக்கும் முடிவை இந்திய அணி நிர்வாகம் எடுக்க வேண்டும்.