சிட்னி: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி மோசமாக செயல்பட்டு வரும் நிலையில் மூத்த வீரர்களை காப்பாற்றும் வகையில் இளம் வீரர் ஒருவரை பலிகடா ஆக்க இந்திய அணி நிர்வாகம் முடிவு செய்து இருக்கிறது என தகவல் வெளியாகி உள்ளது.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது. இந்த தொடரில் இதுவரை நான்கு போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. முதல் போட்டியில் மட்டுமே வெற்றி பெற்ற இந்திய அணி அடுத்த மூன்று போட்டிகளில் இரண்டு தோல்விகளையும். ஒரு டிராவையும் எதிர்கொண்டு இருக்கிறது.

இந்த நிலையில் மெல்போர்னில் நடந்த நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி டிரா செய்ய வேண்டிய நிலையில் தோல்வி அடைந்தது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தி இருந்தது. அந்தப் போட்டியின் முடிவில் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் இந்திய வீரர்களை ஓய்வறையில் கடுமையாக சாடியதாக செய்திகள் வெளியானது.
ஆனால், கம்பீர் மூத்த வீரர்கள் ஆன ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியை எந்த வகையிலும் விமர்சிக்கவில்லை என்ற தகவலும் வெளியாகி உள்ளது. அவர் இளம் வீரரான ரிஷப் பண்ட்டை குறி வைத்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்து இருக்கிறார். மேலும், ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் ரிஷப் பண்ட் அணியில் இருந்து நீக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
அவருக்கு பதிலாக துருவ் ஜுரல் பிளேயிங் லெவனில் விளையாட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் துருவ் விளையாடி இருந்தார். அப்போது இரண்டு இன்னிங்ஸ்களிலும் ஒற்றை இலக்கத்தில் ரன் எடுத்து ஆட்டம் இழந்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிட்னி டெஸ்ட் போட்டியில் ரிஷப் பண்ட்டை நீக்க இருப்பதாக வெளியான செய்திகளை பார்த்த ரசிகர்கள், பிசிசிஐ மற்றும் கம்பீரை விளாசி வருகின்றனர். விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா நீண்ட காலமாக டெஸ்ட் போட்டிகளில் பெரிதாக ரன் குவிக்காத நிலையில் அவர்களை காட்டிலும் அதிக ரன்கள் குவித்து, ஓரளவு பேட்டிங் சராசரியும் வைத்து இருக்கும் ரிஷப் பண்ட்டை அணியில் இருந்து நீக்குவது தவறு என கூறி வருகின்றனர்.