கேன்பெர்ரா: தனது "துவக்க வீரர்" என்ற இடத்தை கே எல் ராகுலுக்கு விட்டுக் கொடுத்தார் ரோஹித் சர்மா. ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் இந்திய டெஸ்ட் அணியில் இனி கே எல் ராகுல் துவக்க வீரராக களமிறங்குவது உறுதியாகி இருக்கிறது. ஆஸ்திரேலிய பிரைம் மினிஸ்டர் லெவன் அணிக்கு எதிரான பயிற்சிப் போட்டியில் இந்த மாற்றம் நடந்தது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா பிரைம் மினிஸ்டர் லெவன் அணிகள் பகல் - இரவு பயிற்சிப் போட்டியில் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 43.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 240 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தது.

அடுத்து இந்திய அணி சேஸிங் செய்ய வந்த போது ஜெய்ஸ்வால் மற்றும் ரோஹித் சர்மா துவக்கம் அளிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஜெய்ஸ்வாலுடன் கே எல் ராகுல் துவக்க வீரராக களமிறங்கினார். இதன் மூலம், ரோஹித் சர்மா தனது துவக்க வீரர் இடத்தை ராகுலுக்கு அளித்து இருப்பது உறுதியாகி இருக்கிறது.
ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் ரோஹித் சர்மா விளையாடவில்லை. அவர் விடுப்பில் இருந்ததால் அவர் இடத்தில் கே எல் ராகுல் துவக்க வீரராக ஆடினார். அந்தப் போட்டியில் கே எல் ராகுல் இரண்டாம் இன்னிங்ஸில் 77 ரன்கள் குவித்தார். முதல் இன்னிங்ஸில் 26 எடுத்து அம்பயரின் தவறான தீர்ப்பால் ஆட்டமிழந்து இருந்தார்.
அவருடன் சேர்ந்து ஆடிய மற்றொரு துவக்க வீரர் ஜெய்ஸ்வால் இரண்டாம் இன்னிங்ஸில் சதம் அடித்தார். கே எல் ராகுல் தனது அனுபவத்தின் மூலம் ஜெய்ஸ்வாலை சரியாக வழிநடத்தினார். இதை அடுத்து இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா அணிக்கு திரும்பினாலும் மிடில் ஆர்டரில் தான் பேட்டிங் செய்ய வேண்டும் என்ற குரல்கள் எழுந்தன.
அதை ஏற்றுக் கொள்ளும் வகையில் தற்போது கேப்டன் ரோஹித் சர்மா தனது இடத்தை விட்டுக் கொடுத்து இருக்கிறார். சுப்மன் கில் இரண்டாவது போட்டியில் விளையாட மாட்டார் என கூறப்படும் நிலையில் ரோஹித் சர்மா மூன்றாவது அல்லது நான்காவது வரிசையில் பேட்டிங் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.