பிரிஸ்பேன்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஆகாஷ் தீப்பை கேப்டன் ரோஹித் சர்மா கடுமையாக திட்டினார். ஆகாஷ் தீப் செய்த ஒரு தவறுக்காக எரிச்சல் அடைந்த அவர் கேமராக்களுக்கு மத்தியில் அவரை கடுமையான வார்த்தைகளால் வசை பாடினார்.
இந்த சம்பவம் விமர்சனத்தையும் சந்தித்து உள்ளது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் உள்ள காபா மைதானத்தில் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆடி வருகின்றன. இந்த போட்டியில், ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 445 ரன்கள் எடுத்தது.

இரண்டாவது நாள் அன்று ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது ஆகாஷ் தீப் வீசிய இன்னிங்ஸின் 114 வது ஓவரில் ஒரு பந்து பிட்ச்சுக்கு வெளியே சென்றது. ஆகாஷ் தீப் கைகளில் இருந்து பந்து வழுக்கிக் கொண்டு சென்றதால் இவ்வாறு நடந்தது. இது போன்ற தவறுகள் அவ்வப்போது நடக்கக்கூடியது தான் என்றாலும் கேப்டன் ரோஹித் சர்மா கடும் கோபத்தில் இருந்ததால் ஆகாஷ் தீப்பை கடுமையாக திட்டினார்.
"உன் தலையில் ஏதாவது இருக்கிறதா?" என கைகளை காட்டி ஆகாஷ் தீப்பை ரோஹித் சர்மா சத்தமாக திட்டினார். அது ஸ்டம்ப் மைக்கிலும் பதிவானது. நேரலையிலும் அவரது பேச்சு ஒளிபரப்பானது. அந்தப் பகுதியை மட்டும் எடுத்து சில ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பரப்பி வருகிறார்கள்.
என்ன தான் கோபமாக இருந்தாலும் மைதானத்தில் வைத்து ஒரு வீரரை கேப்டன் இப்படி வசை பாடலாமா? என பலரும் ஆகாஷ் தீப்புக்கு ஆதரவாக பேசி வருகின்றனர். ஆஸ்திரேலிய அணி பெரிய அளவில் ரன் குவித்ததால் தான் ரோஹித் சர்மா கோபத்தில் இருந்தார். ஆகாஷ் செய்த தவறுக்காக மட்டும் அவர் இவ்வாறு பேசவில்லை. ஒரு புறம் ரோஹித் சர்மாவின் கேப்டன்சி விமர்சனத்தை சந்தித்து வரும் நிலையில் இந்த சம்பவத்திலும் சிக்கி இருக்கிறார் ரோஹித் சர்மா.
ஆகாஷ் தீப் இந்தப் போட்டியில் 29.5 ஓவர்களில் 95 ரன்கள் விட்டுக் கொடுத்து 1 விக்கெட் மட்டுமே வீழ்த்தி இருந்தார். சிராஜை விட குறைவாகவே ரன்களை விட்டுக் கொடுத்து இருந்தார் ஆகாஷ் தீப். சிராஜ் ஒரு ஓவருக்கு சராசரியாக 4.15 ரன்கள் விட்டுக் கொடுத்த நிலையில், ஆகாஷ் தீப் 3.18 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார். பும்ரா இந்தப் போட்டியில் 6 விக்கெட்களை வீழ்த்தினார். அவர் ஒரு ஓவருக்கு சராசரியாக 2.71 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து இருந்தார்.