சிட்னி: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்ததை அடுத்து பயிற்சியாளர் கவுதம் கம்பீர் இந்திய வீரர்களின் ஓய்வறையில் மிகக் கடுமையாக நடந்து கொண்டதாக செய்திகள் வெளியாகி இருந்தன. அதில் முக்கியமான ஒரு விஷயம் சுட்டிக்காட்டப்படுகிறது.
அவர் தனது கோபத்தை எல்லாம் இளம் வீரர்கள் மீதுதான் கொட்டினார் என்கிறார்கள். ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியிடம் அவர் எந்தவிதமான விமர்சனத்தை முன் வைக்கவில்லை எனவும், அவர்களின் ஆட்டத்தை பற்றி பேசவில்லை எனவும் கூறப்படுகிறது.

அதே சமயம், அவர் கேப்டன் ரோஹித் சர்மாவை அணியை விட்டு நீக்கும் வேலைகளை துவக்கி இருப்பதாக கூறப்படுகிறது. பும்ராவுடன் கம்பீர் நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தினார். ரோஹித் மீது கூட நடவடிக்கை எடுக்கத் துவங்கி இருக்கிறார் கம்பீர். ஆனால், விராட் கோலியும் கடந்த சில மாதங்களாக மோசமான ஃபார்ம் அவுட்டில் இருக்கிறார். அவரைப் பற்றி எதுவுமே சொல்லவில்லை கம்பீர்.
சமீபத்தில் நடந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் மற்றும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர்களில் இந்திய அணி மோசமான தோல்விகளை அடைய முக்கிய காரணம் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி சரியாக ரன் குவிக்காததே ஆகும்.
அதற்கு முன் இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரிலும் இந்திய அணி தோல்வி அடைந்தபோது ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி சரியாக விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இரு மூத்த வீரர்களின் ஃபார்ம் அவுட் ஒட்டுமொத்த இந்திய அணியையும் பாதித்திருக்கிறது என்பதே உண்மை.
ரசிகர்களே அவர்களை ஓய்வு பெறுமாறு சமூக வலை தளங்களில் கடுமையான விமர்சனத்தை முன்வைத்து வருகின்றனர். அப்படிப்பட்ட சூழ்நிலையில் ரோஹித் சர்மா மீது நடவடிக்கை எடுக்கப்படும் நிலையில், விராட் கோலி குறித்து கம்பீர் பெரிதாக எந்த முடிவும் எடுக்கவில்லை என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ரோஹித் சர்மா ஓய்வு பெறுவார் என பரவலாக பேசப்பட்டு வருகிறது. விராட் கோலி இன்னும் சில ஆண்டுகள் டெஸ்ட் போட்டிகளில் விளையாட முடியும் என்றாலும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்தால் அவர் இந்திய அணியில் நீடிப்பாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.