அடிலெய்டு: இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் துவக்க வீரராக விளையாடக் கூடாது எனவும், அப்படி செய்தால் அவர் கசாப்பு கடைக்கு செல்லும் ஆடாக மாறுவார் என முன்னாள் வீரர் தோதா கணேஷ் எச்சரித்து இருக்கிறார்.
இந்திய டெஸ்ட் அணியில் கடந்த ஐந்து ஆண்டுகளாக ரோஹித் சர்மா துவக்கக் வீரராக விளையாடி வருகிறார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் அவர் பங்கேற்கவில்லை. அந்த போட்டியில் கே எல் ராகுல் துவக்க வீரராக களமிறங்கி சிறப்பாக செயல்பட்டார். இதை அடுத்து இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா அணிக்கு திரும்பிய போது தனது துவக்க வீரர் இடத்தை கே எல் ராகுலுக்கு விட்டுக் கொடுத்தார்.

ரோஹித் சர்மா நீண்ட காலம் கழித்து மிடில் ஆர்டரில் பேட்டிங் செய்தார். ஆனால், இரண்டு இன்னிங்ஸ்களிலும் அவர் ஒற்றை இலக்கத்தில் மட்டுமே ரன் சேர்ந்து ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தார். இந்த நிலையில், மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா மீண்டும் துவக்க வீரராக ஆட வேண்டும் என ரவி சாஸ்திரி, சுனில் கவாஸ்கர் கூறி இருந்தனர்.
அது பற்றி தோதா கணேஷ் எச்சரித்து இருக்கிறார். அவர் வெளியிட்டு உள்ள பதிவில், "ரோஹித் சர்மா ஏற்கனவே தன்னம்பிக்கை இன்றி ரன் குவிக்க முடியாமல் இருக்கிறார். ஆனால், இப்போது சில கிரிக்கெட் விமர்சகர்கள் அவர் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் துவக்க வீரராக விளையாட வேண்டும் என்கிறார்கள். இது முட்டாள் தனமானது. இந்தத் தொடர் இந்திய துணை கண்டத்தில் நடக்கவில்லை. இங்கே நம் விருப்பத்திற்கு ஏற்ப பேட்டை சுழற்றி ரன் சேர்க்க முடியாது. ஆஸ்திரேலியாவில் அவர் துவக்க வீரராக இறங்குவது கசாப்பு கடைக்கு ஆடு செல்வதைப் போல." என கூறி இருக்கிறார்.
கே எல் ராகுல் கர்நாடகா மாநிலத்தை சேர்ந்தவர் என்பதால் தனது மாநிலத்தை சேர்ந்த வீரரின் இடம் பறிக்கப்படக்கூடாது என தோதா கணேஷ் இவ்வாறு கூறி இருக்கலாம் என கருதப்படுகிறது.