சிட்னி: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டத்தில் முகமது சிராஜ் வீழ்த்திய ஒரு விக்கெட்டால் சிட்னி மைதானமே போர்க்களமாக மாறியது. ஆஸ்திரேலிய அணியின் இளம் வீரர் சாம் கான்ஸ்டாஸ் விக்கெட்டை சிராஜ் வீழ்த்தினார்.
இதை அடுத்து இந்திய வீரர்கள் உற்சாகத்தில் துள்ளி குதித்தனர். அதே சமயம் சிட்னி மைதானத்தில் இருந்த இந்திய ரசிகர்கள் பெரிய அளவில் கோஷமிட்டு அதை கொண்டாடினர். அதைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய ரசிகர்கள் இந்திய அணிக்கு எதிராக கோஷமிட்டனர். அதனால், சிட்னி மைதானமே போர்க்களமாக காட்சி அளித்தது.

ஆஸ்திரேலிய அணியின் இளம் வீரர் சாம் கான்ஸ்டாஸ் மெல்போர்னில் நடந்த நான்காவது போட்டியில் துவக்க வீரராக அறிமுகம் செய்யப்பட்டார். அவர் தனது முதல் போட்டியில் பும்ராவின் பந்து வீச்சில் அதிரடியாக ஆடி கவனத்தை ஈர்த்தார். அத்துடன் ஆடுகளத்தில் இந்திய வீரர்களை இடை விடாமல் சீண்டிக்கொண்டே இருந்தார்.
அதனால், இந்திய அணி வீரர்கள் சாம் கான்ஸ்டாஸ் மீது கடும் கோபத்தில் இருந்தனர். இந்த நிலையில் இந்தப் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தபோதும் சாம் கான்ஸ்டாஸ் இடைவிடாமல் இந்திய வீரர்களின் கவனத்தை திசை திருப்பும் வகையில் பேசிக்கொண்டே இருந்தார். அவர் ஃபீல்டிங் செய்த போது இந்திய வீரர்களுக்கு மிக அருகே நின்றார்.
சுப்மன் கில் பேட்டிங் செய்தபோது அவரது கவனத்தை திசை திருப்பும் வகையில் பேசிக்கொண்டே இருந்தார். அதனால், கில் 20 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அதற்கு பழி தீர்க்க வேண்டி இந்திய வீரர்கள் காத்துக் கொண்டிருந்தனர். இந்த நிலையில், முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 185 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் ஆஸ்திரேலிய அணி பேட்டிங் ஆடத் துவங்கியது. ஆஸ்திரேலிய அணியின் துவக்க வீரராக பேட்டிங் செய்ய வந்த சாம் கான்ஸ்டாஸ் நேரத்தை கடத்தும் வகையில் பும்ரா பந்து வீச வந்த போது வேண்டுமென்றே பேட்டிங் செய்யாமல் விலகினார். அதனால், பும்ரா கோபமடைந்தார்.
அதற்கு அடுத்த சில பந்துகளில் உஸ்மான் கவாஜா விக்கெட்டை பும்ரா வீழ்த்தினார். அப்போதே இந்திய வீரர்கள் சாம் கான்ஸ்டாஸ்-ஐ குறி வைத்து ஆக்ரோஷமாக கத்தினர். முதல் நாள் ஆட்டம் முடிந்த நிலையில் இரண்டாம் நாள் அன்று ஆஸ்திரேலிய அணி ரன் எடுக்க முடியாமல் திணறியது.
மார்னஸ் லாபுஷேன் 2 ரன்களில் ஆட்டம் இழந்தார். அடுத்து சாம் கான்ஸ்டாஸ் பும்ரா பந்து வீச்சில் பவுண்டரி அடித்து ஆடி வந்தார். ஆனால், அவரை எப்படியாவது வீழ்த்த வேண்டும் என உறுதியாக இருந்த இந்திய அணி சிராஜ் ஓவரில் அதை செய்து காட்டியது. சிராஜ் வீசிய அவுட்சைட் ஆஃப் பந்தை சாம் கான்ஸ்டாஸ் எட்ஜ் செய்தார்.
அதை ஜெய்ஸ்வால் கேட்ச் பிடித்தார். உடனடியாக இந்திய அணி உற்சாகத்தில் ஆழ்ந்தது. இந்திய ரசிகர்களும் உற்சாகத்தில் கூச்சலிட்டனர். அதன் பின் ஆஸ்திரேலிய ரசிகர்களும் கூச்சலிட்டனர். அதனால் சிறிது நேரம் பரபரப்பு எழுந்தது. அடுத்து வந்த டிராவிஸ் ஹெட் 4 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். ஆஸ்திரேலிய அணி 39 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்தது.