மும்பை : ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வீரர் ஒருவருக்கு இடம் அளிக்காத நிலையில், நாடாளுமன்ற எம்பி சசி தரூர் அந்த வீரருக்கு ஆதரவாக குரல் எழுப்பி இருக்கிறார்.
2023 உலகக்கோப்பை தொடர் முடிவுக்கு வந்த நிலையில், அடுத்து இந்தியா - ஆஸ்திரேலியா டி20 தொடர் நடைபெற உள்ளது. உலகக்கோப்பை அணியில் இடம் பெற்ற பல வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்ட நிலையில் அந்த அணியில் இடம் பெறாத பிற வீரர்களை அதிக அளவில் தேர்வு செய்தது தேர்வுக் குழு.

ஏற்கனவே, உலகக்கோப்பை அணியில் இடம் பெறுவார் என கூறப்பட்டு பின் வாய்ப்பு பெறாமல் போன சஞ்சு சாம்சனுக்கு டி20 அணியில் இடம் கிடைக்கும் என ரசிகர்கள் கூறி வந்தனர்.
ஆனால், சஞ்சு சாம்சனுக்கு இந்திய டி20 அணியில் இடம் கிடைக்கவில்லை.
இந்த நிலையில், அவருக்கு ஆதரவாக களமிறங்கி இருக்கிறார் கேரளாவை சேர்ந்த எம்பி சசி தரூர். சஞ்சு சாம்சனும் கேரளாவைச் சேர்ந்தவர் என்பதால் அவருக்கு ஆதரவாக குரல் எழுப்பி இருக்கிறார். இந்திய டி20 அணிக்கு தற்காலிக கேப்டனாக சூர்யகுமார் யாதவை நியமித்து இருக்கும் நிலையில், அவரை விட சஞ்சு சாம்சன் கேப்டன் பதவிக்கு தகுதியானவர் என கூறி இருக்கிறார் சசி தரூர்.
ஒருநாள் போட்டிகளில் சூர்யகுமார் யாதவை விட சிறந்த பேட்டிங் சராசரி வைத்துள்ளார் சஞ்சு சாம்சன். ஆனால், இந்திய ஒருநாள் அணியில் உலகக்கோப்பை தொடருக்கு முன் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
தற்போது உள்ளூர் டி20 தொடரான சையது முஷ்டாக் அலி தொடரில் சஞ்சு சாம்சன் இரண்டு அரைசதம் அடித்து இருக்கிறார். கடைசியாக ஆடிய சர்வதேச டி20 போட்டியில் கூட 26 பந்துகளில் 40 ரன்கள் குவித்து இருந்தார். மேலும், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என இரண்டு பணிகளை மேற்கொள்ளக் கூடியவர் சஞ்சு சாம்சன்.
சசி தரூர் சஞ்சு சாம்சனுக்கு ஆதரவாக வெளியிட்டுள்ள பதிவில், "இது உண்மையிலேயே விவரிக்க முடியாத விஷயம். சஞ்சு சாம்சன் வெறுமனே அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டியவர் என்பதை தாண்டி மற்ற சீனியர்கள் இல்லாத நேரத்தில் அவர் அணியை கேப்டனாக வழிநடத்தியிருக்க வேண்டும். கேரளா மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு கேப்டனாக செயல்பட்டு அனுபவம் கொண்ட சஞ்சு சாம்சன் அந்த விஷயத்தில் சூர்யகுமார் யாதவை விட சிறந்தவர். கிரிக்கெட்டை விரும்பும் பொதுமக்களுக்கு தேர்வுக் குழுவினர் விளக்கம் அளிக்க வேண்டும். சாஹலும் ஏன் அணியில் இடம் பெறவில்லை?" என சசி தரூர் ட்விட்டரில் கூறி இருக்கிறார்.