பிரிஸ்பேன்: இந்திய அணியின் வருங்கால நட்சத்திரம் என பேசப்பட்ட சர்ஃபராஸ் கான் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய வீரர்களின் பயிற்சியின் போது பந்தை எடுத்துப் போடும் "பால் பாய்" (Ball boy) வேலையை மட்டுமே செய்து வருவதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.
2024 ஆம் ஆண்டின் துவக்கத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமானார் சர்ஃபராஸ் கான். அவர் மிடில் ஆர்டரில் அபாரமாக பேட்டிங் செய்து இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் 5 இன்னிங்ஸ்களில் 200 ரன்கள் எடுத்தார். மூன்று அரை சதங்களை அடித்து அசத்தி இருந்தார். அந்த தொடரின் முடிவில் அவரது டெஸ்ட் பேட்டிங் சராசரி 50 ஆக இருந்தது.

அடுத்து நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர் வாய்ப்பு பெற்றார். அந்தத் தொடரில் அவர் ஒரு சதம் அடித்த போதும் மற்ற ஐந்து இன்னிங்ஸ்களில் சொதப்பினார். மொத்தம் 6 இன்னிங்ஸ்களில் 171 ரன்கள் எடுத்தார். இதில் ஒரு இன்னிங்ஸில் எடுத்த 150 ரன்களை நீக்கி விட்டு பார்த்தால், 5 இன்னிங்ஸில் 21 ரன்கள் மட்டுமே எடுத்து இருக்கிறார்.
இந்த மோசமான செயல்பாட்டால் அவருக்கு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்கவில்லை. எனினும், அவர் உத்தேச அணியில் மாற்று வீரராக இடம் பெற்று இருக்கிறார். இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் வீடியோ ஒன்றில் அவரைப் பார்த்த ரசிகர்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ள மூன்றாவது டெஸ்ட் போட்டி காபா மைதானத்தில் நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக அங்கு இந்திய வீரர்கள் வலைப் பயிற்சியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது பேட்ஸ்மேனுக்கு பின்னே அமர்ந்து கொண்டு பந்தை எடுத்து போடும் வேலையை மட்டுமே செய்து கொண்டு இருந்தார் சர்ஃபராஸ் கான்.
இதை அடுத்து அவருக்கு போட்டியில் தான் வாய்ப்பு அளிக்கவில்லை. வலைப் பயிற்சியிலும் பேட்டிங் செய்ய வாய்ப்பு இல்லாமல் புறக்கணிக்கப்பட்டு இருக்கிறார் என ரசிகர்கள் கூறி வருகின்றனர். தற்போது இந்திய அணியின் மிடில் ஆர்டரில் மாற்று வீரர்களாக தேவ்தத் படிக்கல், துருவ் ஜுரல் ஆகியோர் உள்ளனர். அதனால் சர்ஃபராஸ் கானுக்கு அத்தனை எளிதில் அணியில் வாய்ப்பு கிடைக்காத சூழ்நிலை உள்ளது.