கோலி அவுட்டான சர்ச்சைக்குரிய கேட்ச்
முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்டில் நடந்தது. அந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. அந்த போட்டி முழுவதும் கோலி அமைதியாக இருந்தார். களத்தில் டேன்ஸ் கூட ஆடினார். ஆனால், இரண்டாம் டெஸ்டில் இந்தியா சறுக்கியது. அதுவும் இல்லாமல் கோலி சதம் அடித்து பின்னர் சர்ச்சைக்குரிய கேட்ச் மூலம் ஆட்டமிழந்தார்.
கோலி உரசல்
அதன் பின் ஆஸ்திரேலியா பேட்டிங் செய்ய வந்த போது அந்த அணியின் கேப்டன் டிம் பெய்ன்னை வம்பிழுத்தார். சிறிய பதிலடியோடு அந்த பேச்சு முடிவுக்கு வந்தது. அத்தோடு கோலி விடவில்லை. மீண்டும் ஒருமுறை டிம்மை உரசும் வகையில் சென்றார். அப்போது டிம் கோலியை அமைதியாக இருக்குமாறு கூற, அம்பயர் தலையிட்டு இருவரையும் பேசாமல் போட்டியை ஆடுமாறு கூறினார்.
எச்சரிக்கை செய்த ஹஸ்ஸி
மீண்டும் மீண்டும் கோலி இப்படி பிரச்சனை செய்ய ஆரம்பித்துள்ளது சரியில்லை என பலரும் கூறி உள்ளனர். ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மைக் ஹஸ்ஸி கூறுகையில், "கோலி கட்டுப்பாட்டை இழந்து கொண்டு இருக்கிறார். அவர் தற்போது நடந்து கொள்ளும் விதம் எனக்கு பிடிக்கவில்லை. நான் பார்த்தவரையில் எந்த கேப்டனும் இப்படி நடந்து கொண்டதில்லை" என கூறி இருக்கிறார்.
கோலி தப்பித்துக் கொள்கிறார்
சஞ்சய் மஞ்ச்ரேக்கர், கோலி தன் கேப்டன் பொறுப்பை உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும் என தெரிவித்தார். ஒரு வேளை விராட் கோலி ஒரு சாம்பியன் வீரராக இல்லாவிட்டால் அவரது சில செயல்கள் பெரும் சர்ச்சையாக மாறி இருக்கும் என கூறினார்.
கிளார்க் வேறு மாதிரி விளக்கம்
மைக்கேல் கிளார்க் மற்றும் பாண்டிங் வேறு விதமாக இதை பார்க்கின்றனர். கோலி கோட்டை தாண்டாமல் எதிரணி வீரர்களை சீண்டும் வரை பிரச்சனை இல்லை என கூறுகின்றனர். கிளார்க் கூறுகையில், கோலி ஆக்ரோஷமாக பேட்டிங் செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிறோம். அதே போல அவர் களத்திலும் நடந்து கொள்கிறார். இதை மட்டும் நிறுத்துங்கள் என நாம் கூற முடியாது என தெரிவித்தார்.